Header Ads



சபாநாயகருக்கு அறிவிக்காமல் சம்பிக்கவை, கைது செய்திருந்தால் அது தவறாகும் - வாசுதேவ

(எம்.ஆர்.எம்.வஸீம்)

சம்பிக்க ரணவக்கவைின் கைதுக்கும் அரசாங்கத்துக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது சட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விடயமே தவிர அரசியல் பழிவாங்கல் அல்ல என நீர்வழங்கல் மற்றும் வசதிகள் ராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அத்துடன் சம்பிக்க ரணவக்கவை கைதுசெய்யும்போது அதுதொடர்பில் சபாநாயகருக்கு அறிவுறுத்தியிருக்கவில்லை என்றால், அது தவறாகும் எனவும் குறிப்பிட்டார்.

தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கைதுசெய்யப்பட்டிருப்பது தொடர்பாக எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். சம்பிக்கவின் கைதுக்கும் அரசாங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது சட்டத்தை நிலைநாட்டும்போது மேற்கொள்ளப்படும் சம்பவமாகும். அரசியல் ரீதியில் அவரை கைதுசெய்யுமாறு நாங்கள் தெரிவிக்கவுமில்லை, அவரை சுற்றிவளைக்கவும் இல்லை. வேறு யாரையும் இவ்வாறு சுற்றிவளைக்குமாறு நாங்கள் தெரிவிக்கவும் மாட்டோம். ஏனெனில் இது அரசாங்கத்தின் வேலையல்ல. 

ஆனால் கடந்த அரசாங்கமே இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. ஒருவரை கைதுசெய்துவிட்டு அதுதொடர்பாக ஆடம்பரமாக தெரிவித்து வந்தது.

நாங்கள் அவ்வாறு தெரிவிக்கமாட்டோம். கைதுசெய்வதென்பது எமது விடயமல்ல. அது பொலிஸாருக்குரிய கடமை. அதில் நாங்கள் தலையிடமாட்டோம். அதேநேரம் நீதிமன்றம் அவரை நிரபராதி என தெரிவித்து விடுவித்தால் அதனை மீறி நாங்கள் செயற்படமாட்டோம். 

அத்துடன் கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் சட்டத்தை செயற்படுத்த இடமளிக்கவில்லை. தற்போது அந்த நடவடிக்கைகள் எந்த தடையுமின்றி இடம்பெறுகின்றன. அதனால்தான் கடந்த காலங்களில் இடம்பெறாத விடயங்கள் தற்போது விரைவாக இடம்பெற காரணமாகும்.

மேலும் சம்பிக்க ரணவக்கவின் கைது பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு முரணாகும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்திருக்கின்றது. சபாநாயகர் ஐக்கிய தேசிய கட்சிக்காரர்.

அவர் சம்பிக்க ரணவக்கவின் கைது தொடர்பாக இவ்வாறு தெரிவித்ததற்கு மற்றவர்களை கைதுசெய்த சந்தர்ப்பங்களில் அவ்வாறு தெரிவித்ததில்லை. என்றாலும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்யும் அதுதொடர்பாக சபாநாயகருக்கு அறிவுறுத்தவேண்டும். அறிவுறுத்தாமல் கைதுசெய்வது தவறாகும் என்றார்.

No comments

Powered by Blogger.