Header Ads



குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, இடைக்கால தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு


குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக எதிர்வரும் ஜனவரி 22 ஆம் திகதிக்குள் பதிலளிக்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சட்டம் இடைநிறுத்தப்பட வேண்டுமா என்பது தொடர்பில் பரிசீலிக்க வேண்டியுள்ளதாகவும் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 60-க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

காங்கிரசின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இந்திய முஸ்லிம் லீக் மற்றும் அசோம் கன பரிஷத் இயக்கங்களின் மனுக்களும் இதில் அடங்குகின்றன.

தலைமை நீதிபதி S.A. போப்டே தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

2014 முதல் இந்தியாவில் குடியேறிய பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கப்படாமல் தடுக்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

குடியுரிமை வழங்குவதற்கு மதம் அடிப்படையாக இருக்க முடியாது என தெரிவித்துள்ள மனுதாரர்கள் புதிய சட்டம், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிரானது எனவும் கூறியுள்ளனர்.

இந்த சட்டத் திருத்தமானது தேசத்தின் மதச்சார்பின்மையின் அடிப்படைக் கொள்கையை பாதிப்பதாகவும் அனைத்து மதங்களை சார்ந்தவர்களுக்கும் சமமான உரிமையை வழங்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது எனவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளதுடன், வன்முறைகளும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.