Header Ads



சிங்கள மக்கள் UNP யிடம் இருந்து விலகியமையே, சஜித் தோல்வியடைய காரணம் - நளின்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்தாலும் நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்பை மதித்து ராஜினாமா செய்வதே அரசாங்கம் தற்போது எடுக்க வேண்டிய பொருத்தமான தீர்மானம் என பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கின்றது என்பதற்காக மட்டுமே தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் இருப்பது மக்களின் ஆணையை புறந்தள்ளும் நடவடிக்கையாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று -19- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நளின் பண்டார இதனை குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதி தனது கொள்கையை அமுல்படுத்துவதற்காகவும் அவர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுதற்காக புதிய அமைச்சரவையை நியமித்து அரசாங்கத்தை அமைக்க சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கம் கையாண்ட சில நடவடிக்கைகள் காரணமாக சிங்கள பௌத்த மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்து விலகியமை சஜித் பிரேமதாச தோல்வியடைய காரணமாக அமைந்தது.

இதற்கு சஜித் பிரேமதாச பொறுப்புக் கூற வேண்டியதில்லை. நடந்த தவறுகளை சரி செய்து, மீண்டும் வெற்றியை நோக்கி செல்வதற்காக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.