Header Ads



சந்திரிக்கா தூக்கப்பட்டு, அத்தனகல்லவுக்கு லசந்த நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல தொகுதியின் பிரதான அமைப்பாளரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு பதிலாக, அந்த தொகுதியின் பதில் அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை மீறி, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டமை, சுகந்ததாச உள்ளக அரங்கில் கடந்த 5ஆம் திகதி மாநாடு ஒன்றை நடத்தியமை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, அன்றைய தினம் இரவு நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பதில் தலைவரான பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

இதனை தவிர, மாநாட்டில் இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டத்தைச் சேர்ந்த சில தொகுதி அமைப்பாளர்கள் கலந்துக்கொண்டனர் எனவும் அவர்களுக்கு பதிலாக புதிய அமைப்பாளர்களை தெரிவு செய்யும் அதிகாரம் அந்த மாவட்டங்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் பியதாச குறிப்பிட்டுள்ளளார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவடையும் வரை தேர்தல் பிரசார நடவடிக்கைகளை வெற்றிகரமான மேற்கொள்வதற்காக பதில் தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலின் பின்னர் மாநாட்டில் கலந்துக்கொண்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை நடத்தி, தொகுதி அமைப்பாளர்களை பதவி நீக்கம் செய்வது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாகவும் அந்த கட்சியின் பதில் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.