Header Ads



ஜமாத்தே இஸ்லாமி மாணவர் இயக்கத்தின் 40 வது வருடாந்த கூட்டம் - 6 தீர்மானங்களும் நிறைவேற்றம்


ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் 40 ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டம் கடந்த வாரம் 'மானுடம் காக்கும் இளைஞர்கள்' எனும் கருப்பொருளில் கொழும்பில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் 'இலங்கையில் இளைஞர் தீவிரமயமாக்கல் பிரச்சினை; பாடங்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழி' எனும் தலைப்பில் Chathuranga Abeysinghe (BSc Finance (Special) USJP, ACMA, Expert In Data Science) அவர்களினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. மேலும் 'காலத்தின் தேவை' எனும் தலைப்பிலான உரை சட்டத்தரணி Faris Saly (LL.M. (Staffordahire), LL.B (Colombo) Attonery - At - Law, Chief Legal Consultant & Senior Counsel) நிகழ்த்தினார்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக புதிய தேசிய தலைவர் தெரிவு மற்றும் அடுத்த ஆண்டிற்கான நிர்வாக குழு தெரிவு என்பன இடம்பெற்றன. 2020ஆம் ஆண்டிற்கான தேசிய தலைவராக புத்தளத்தைச் சேர்ந்த சகோதரர்  M.A. Amjath Khan (CMA (Reading) மற்றும் பொதுச் செயலாளராக மாவனல்லையைச் சேர்ந்த சகோதரர் M.N. Wajidh (BSc (Physics Special) University of Colombo) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் நிகழ்விலே கடந்த ஆண்டு தேசிய ரீதியான செயற்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் வினைதிறனுடன் செயற்பட்ட அங்கத்தவர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் 40 ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டத்தின் பிரகடனம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

40வது வருடாந்த பொதுக் கூட்டத்தின் பிரகடனம் வருமாறு:

1.      ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் சமய, பண்பாட்டு, அரசியல், இன, மொழி பிரதேச அடையாளங்களுக்கு அப்பால் நின்று அவற்றை அங்கீகரித்து குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் பொதுவாக இலங்கை சமூகத்திற்குள்ளும் 'மாணவர்' என்ற தளத்தில் தொடர்ந்தும் தனது செயற்பாடுகளை முன்னெடுக்க திடசங்கற்பம் கொள்கின்றது.

2.      இலங்கை மாணவர் சமூகம் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகளும் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினதும் பிரச்சினையாக கருதி அவற்றிற்கான தீர்வை வேண்டி நடாத்துகின்ற மாணவர் போராட்டங்களுக்கு தனது பூரண ஆதரவை வழங்குகின்றது.

3.      மாணவர்கள் இந்நாட்டின் நாளைய தலைவர்கள் என்பதை சிரமேற்கொண்டு அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அரசு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்பு வேண்டிக் கொள்கின்றது.

4.      40வது வருடத்தில் காலடி பதிக்கின்ற ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் இஸ்லாமிய பெறுமானங்கள் விழுமியங்கள் என்பவற்றோடு இலங்கையர் என்ற அடையாளத்தோடு நாட்டின் பேண்தகு அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யும் மாணவர் பரம்பரையொன்றை உருவாக்குவதற்கு தனியாகவும், மனித பெறுமானங்கள் மற்றும் விழுமியங்களின் மதிப்பும் நம்பிக்கையும் கொண்ட அனைத்து தரப்புடன் இணைந்து கூட்டாகவும் முனைப்புடன் செயற்படும்.

5.      ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் நமது தேசத்திற்கு பேரழிவை ஏற்படுத்தக் கூடிய சமய, கலாச்சாரம், பண்பாடு, அரசியல், இனம், மொழி, பிரதேசம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற அனைத்துவிதமான கடும்போக்கு மற்றும் தீவிர சிந்தனை அதனையொட்டிய நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதோடு இவற்றை இல்லாதொழிக்கத் துணை புரியும் தரப்பினருடன் ஒத்தழைக்க கடமைப்பட்டுள்ளது. கடந்த 40 வருட கால இடையறாத மாணவ செயற்பாட்டில் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தோடு ஒத்துழைத்து உதவி ஒத்தாசை புரிந்து அரச அரசசார்பற்ற நிறுவனங்கள், வளவாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்து கல்விச் சமூகத்தின் பங்காளர்களுக்கும், ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளதுடன் நன்றி நவிதலை கூறிக் கொள்கின்றது.

6.      நாட்டின் சமாதான, சகவாழ்வை சீர்குலைக்கின்ற வகையில் செயற்படும் தனி நபர்கள், அமைப்புக்கள் மற்றும் அவற்றை பரப்புரை செய்கின்ற சமூக மற்றும் வெகுஜன ஊடகங்களுக்கு எதிராக எவ்வித பாகுபாடுமின்றி சட்ட நடவடிக்கை எடுத்து கடந்த 70 வருடங்களாக எமது நாட்டில் நிலைத்து நிற்கும் பன்மைத்துவ சமூக கட்டமைப்பையும் பொதுவாக ஜனநாயக விழுமியங்களையும் பாதுகாக்க அரசு மற்றும் அனைத்துத் தரப்பும் முன் வரவேண்டும் என்பதோடு இந்த உயரிய கோட்பாடுகளை பாதுகாக்க மாணவர் சமூகம் உட்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வினயமாக வேண்டிக் கொள்கின்றது. .

No comments

Powered by Blogger.