தமிழர் முஸ்லிம்களுக்கு எதிரான ஞானசாரரின் கருத்துக்கள், பௌத்தவாக்குகளை ஒரு கட்சியை நோக்கிக் குவிக்கும்
இலங்கை சிங்கள பௌத்த நாடு. இதைஏற்பவர்கள் இந்தநாட்டில் இருக்கலாம். ஏனையோர் தங்களது உடமைகளுடன் வெளியேறலாம் என்று பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொடே அத்தே ஞானசாரதேரர் கருத்து வெளியிட்டுள்ளார். அவரது கருத்தானது இனங்களுக்கிடையில் குரோதத்தையும் வன்முறையையும் தூண்டுவதாக அமைந்துள்ளது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
தேரரின் கருத்து குறித்து ஈபி.ஆர்.எல்.எவ்.வின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இலங்கையின் அரசியல் சாசனத்தின் பிரகாரம் இத்தீவானது ஜனநாயக சோசலிச குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது சிங்கள பௌத்த நாடு என்று எந்தவொரு சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதை சிங்கள பௌத்த இனவாதத்துக்குள் புதைந்துகிடக்கும் ஞானசாரதேரர் போன்ற பிக்குகளும் அவர்களின் வாரிசுகளும் புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கை என்பது பலமொழி, பலமத,பல இனங்களைக் கொண்ட நாடு என்றும் வடக்கு, -கிழக்கு என்பது தமிழ் பேசும் மக்களின் வரலாறு பூர்வமான வாழ்விடம் என்றும் 1987ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்டுள்ள இந்திய- –இலங்கை ஒப்பந்தத்தின் முதலாவது வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்டுள்ளனர். ஆகவே இலங்கை என்பது ஒரு சிங்கள பௌத்த நாடென்ற ஞானசாரதேரரின் திமிர்த்தனமான கருத்தும் அதனை ஏற்றுக்கொள்ளாதவர்கள் வெளியேறலாம் என்னும் அடாவடித்தனமான கருத்தும் மிக மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
விஜயன் இந்தநாட்டுக்கு வந்தபொழுது இந்த நாட்டில் தொன்மமான ஒரு நாகரிகம் இருந்ததென்பதும், இந்த நாட்டில் இயக்கர், நாகர் என்னும் இனக் குழுமங்கள் இருந்ததாகவும் தீவின் நான்கு பகுதிகளிலும் சிவாலயங்கள் இருந்ததாகவும் சிங்கள வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அசோகச் சக்கரவர்த்தியின் காலத்தில் அவரது மகளான சங்கமித்திரையின் மூலமாகவே இலங்கைக்கு பௌத்தம் கொண்டுவரப்பட்டது. அவ்வாறான பௌத்தம் வருவதற்கு முன்னர், இங்கு சிவாலயங்கள் தான் இருந்தன என்பது வரலாற்றாசிரியர்களும் ஆய்வாளர்களும் ஏற்றுக் கொண்ட உண்மை.
அதேபோல் சிங்களமொழி என்பது ஆறாம் நூற்றாண்டு காலத்திலேயே தோற்றம் பெற்றது. அதன் பின்னரே தமிழ், பாலி, சமஸ்கிருதம் ஆகியவற்றின் துணையுடன் சிங்கள மொழி செழுமைப்படுத்தப்பட்டது. இவை யாவும் வரலாறு.
இராவணபலய என்ற ஒரு அமைப்பு சிங்கள பௌத்த தீவிரவாதிகளால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயரில் இருக்கும் இராவணன் யார்? இலங்காபுரியின் மன்னனாக இருந்த இராவணன் என்பது குறிப்பிடத்தக்கது. இராமாயணம் நடந்த காலகட்டம் என்பது ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டகாலம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவ்வாறிருக்குமாக இருந்தால் சிவபக்தனான இராவணனின் காலகட்டமும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவே இருக்கமுடியும். எனவே, விஜயன் வருவதற்கு முன்பும், பௌத்தம் வருவதற்கு முன்பும் சிங்கள மொழி தோன்றுவதற்கு முன்பும் இங்கு சிவபக்தர்கள் இருந்தார்கள் என்பதும் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் இருந்தார்கள் என்பதும் வெளிப்படையானது.
பிரித்தானியர் இந்த நாட்டுக்கு வந்த போதும் கூட, கண்டி இராச்சியத்தின் நீதிமன்ற மொழியாக தமிழே இருந்ததென்னும் வரலாற்றை நாம் பார்க்கின்றபோது இந்நாட்டின் வரலாற்று பூர்வமான பூர்வீகக்குடிகள் தமிழர்களே என்பது நிதர்சனமானது.
இவ்வாறான சூழ்நிலையில், தமிழர்களையோ, தமிழ் பேசும் ஏனைய இனத்தவரையோ இந் நாட்டை விட்டு வெளி யேறும்படி கூறுவதையும், சிங்களத்தை படிக்கச் சொல்லிக் கர்ச்சிப்பதும் அறிவிலித்தனமானதாகும். பெரும்பான்மை சமூகத்து மதப்பிரமுகர்கள் என்ற அடிப்படையில், சிறுபான்மை மக்களை அடக்கியாளலாம், சிறுபான்மை மதங்களை அழித்தொழிக்கலாம் என்ற இழிவான சிந்தனை இனிமேலும் சிங்கள பௌத்த மேலாதிக்க வாதிகளிடம் இருக்கக்கூடாது.
ஞானசாரதேரர் அண்மையில் முல்லைத்தீவுக்குச் சென்றிருந்தார் என்பதும், அங்கு நீதிமன்றக் கட்டளையைப் புறக்கணித்து நீராவியடி பிள்ளையார் கோயிலில் பலாத்காரமாக உட்கார்ந்திருந்த பௌத்த பிக்குவின் உடலை அக்கோயிலுக்கு அருகாமையிலேயே தகனம் செய்வதற்கு முன்னின்று செயற்பட்டார் என்பதும் அண்மைய செய்திகள்.
முல்லைத்தீவுக்குப் போனதும் தமக்கு தமிழகத்துக்குப் போனதான ஒரு மன உணர்வு ஏற்பட்டதாக ஞானசாரதேரர் அங்கலாய்த்திருக்கின்றார். ஞானசாரதேரர் ஒரு விடயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். வடக்கு-, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பதையும் சிங்கள பௌத்த மக்கள் என்பவர்கள் சிறிய அளவிலேயே வாழ்கிறார்கள் என்பதையும் இலங்கையின் குடிசன புள்ளிவிபரங்களிலிருந்து அறிந்துகொள்ளமுடியும். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு, நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் இவற்றைப் புரிந்துகொண்டு கருத்துக்களை வெளியிடுவதே சிறப்பாக இருக்கும்.
ஜனாதிபதித் தேர்தல் நெருங்குகிற ஒரு காலகட்டத்தில், ஞானசார தேரர் வெளியிட்டிருக்கும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான காட்டமான கருத்துக்கள் என்பது, சிங்கள பௌத்தவாக்குகளை ஒரு கட்சியை நோக்கிக் குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, தேர்தல் காலகட்டத்தில் ஒருபதற்றமானதும் தமிழன விரோதமானதுமான ஒரு சூழ்நிலையை உருவாக்க நினைக்கிறாரோ என்று சிந்திக்கத் தூண்டுகிறது.
ஏற்கனவே நீதிமன்றத்தை அவமதித்ததன் காரணமாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டவர்தான் இந்த ஞானசாரதேரர். ஆனால் மீண்டும் நீதிமன்றத்தை அவமதித்து நீதிமன்றக் கட்டளையை மீறி செயற்பட்டுக்கொண்டிருப்பவர்தான் இந்த பௌத்த பிக்கு. எனவே, மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதற்கோ அல்லது மேலாதிக்க சிந்தனையிலிருந்து ஏனையோருக்கு உத்தரவு போடுவதற்கோ ஞானசாரதேரருக்கும் அவரது வாரிசுகளுக்கும் எத்தகைய அருகதையுமில்லை என்பதை சிங்கள பௌத்த மேலாதிக்க வாதிகள் புரிந்துகொள்ளவேண்டும்.
நீதிமன்றத்தை அவமதித்ததன் காரணமாக தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்த ஞானசாரதேரர், மீண்டும் ஒரு முறை அவ்வாறான நீதிமன்ற அவமதிப்புக்களில் ஈடுபடமாட்டார் என்பதாலும் இனங்களுக்கிடையில் குரோத உணர்வுகளை வளர்க்கமாட்டார் என்றஅடிப்படையிலுமே அவருக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்புவழங்கப்பட்டதாக நாங்கள் அறிகிறோம்.
ஆனால் வெளியில் வந்து சிலமாதங்களுக்குள்ளேயே நீதிமன்றக் கட்டளையை ஏற்கமறுத்து, பௌத்தபிக்குகள் சொல்வதுதான் முதன்மையானது என்றும் நீதிமன்ற கட்டளைகள், தீர்ப்புக்களையும்விட தனது தான்தோன்றித்தனமான கருத்துக்கள் தான் உயர்ந்தது என்றும் செயற்படக்கூடிய இந்த பௌத்தபிக்கு தொடர்பாக இலங்கை அரசாங்கமும், இலங்கையின் நீதித்துறையின் உயர்பீடமும் எத்தகைய தீர்மானங்களை மேற்கொள்ளப் போகின்றன என்பதை தயவுசெய்து மக்களுக்கு அறி யத் தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.இனத்துவேஷத்தையும் இனமோதலையும் உருவாக்கக்கூடிய ஞானசாரதேரரின் கருத்துக்களை ஈழமக்கள் புரட்சிகர விடு தலை முன்னணி மீண்டும் ஒருமுறை வன் மையாகக் கண்டிக்கிறது.
Ajan போல் உள்ள இனவாதிகல் இனியாவது பிக்கு சாருக்கு வால் பிடித்து வக்காலத்து வாங்காமல் மனிதர் போல் வாழ முற்படுங்கல்.
ReplyDeleteசரியாக சொன்னிங்க. இந்த ஞானசாரை மரத்தில் கட்டி தாருமாரக அடி கொடுக்க வேண்டும்.
ReplyDeleteAll praise related to this NANASARA goes to MY3, who released him from jail. So Let MY3 take responsibility for every racism word from this NANASARA...
ReplyDelete@Rozard, நீங்க நல்ல காமேடி பண்ணுறீங்க
ReplyDelete