Header Ads



யுத்த வெற்றி என்பது முழு நாட்டுக்கும் சொந்தமானது, அதை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்த முடியாது

போர் வெற்றி என்பது தனியொரு நபருக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ சொந்தமானதல்ல. அதில் பல்வேறு தரப்பினரின் பங்களிப்பு காணப்படுவதுடன், போர் வெற்றி முழு நாட்டிற்கும் சொந்தமானதாகும்.

எனவே அதனை தேர்தல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 இச்சந்திப்பில், அண்மையில் பத்திரிகையில் தேர்தல் பிரசார நோக்கில் தற்போதைய இராணுவத்தளபதியின் புகைப்படத்துடன், அவருடைய செய்தியொன்று பிரசுரமாகியிருந்தது. இது தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் அமைந்திருப்பதால் அதற்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக தற்போது பதவியில் இருக்கும் இராணுவத்தளபதியின் புகைப்படத்தையும், அவருடைய அரசபதவியின் பெயரையும் பயன்படுத்திக் கொண்டமை மிகவும் தவறான விடயமாகும். இதுகுறித்த முறைப்பாடு எமக்குக் கிடைக்கப்பெற்றது.

அதனையடுத்து இவ்விடயத்தைத் தெரியப்படுத்தி, அதற்கான விளக்கத்தைக் கோரும் விதமாக பாதுகாப்புச் செயலாளருக்கும், ஜனாதிபதியின் செயலாளருக்கும் கடிதமொன்றை அனுப்பிவைத்தோம்.

அதேவேளை பத்திரிகையில் பிரசுரமான இராணுவத்தளபதியின் செய்தி, அவர் தேர்தலை இலக்காகக் கொண்டு கூறியதல்ல. அவர் முன்னர் எப்போதோ கூறிய விடயம் தற்போது பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. எனவே அதுகுறித்த தன்னுடைய நிலைப்பாட்டை இன்னமும் ஒருவார காலத்திற்குள் அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கின்றோம். இந்தியாவில் தேர்தலின் போது குறித்தவொரு அரசியல்கட்சி இராணுவவீரர் அபிநந்தனின் புகைப்படத்தை தேர்தல் பிரசாரத்திற்காகப் பயன்படுத்த முற்பட்ட போது இந்திய தேர்தல்கள் ஆணையகம் அதனைத் தடைசெய்தது. அவ்விடயத்தை இப்போது ஞாபகப்படுத்திக் கொள்வது சிறந்ததாகும்.

மேலும் யுத்த வெற்றி என்பது தனியொரு நபருக்கோ அல்லது குறித்தவொரு கட்சிக்கோ சொந்தமானதல்ல. நாட்டில் பலவருடகாலம் நிலவிய போரை முடிவிற்குக் கொண்டுவருவதில் பலருடைய பங்களிப்பு காணப்பட்டது.

 எனவே அது ஒட்டுமொத்த நாட்டின் வெற்றி என்பதுடன், நாட்டிற்குச் சொந்தமானதும் ஆகும் என அவர்  தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.