ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், சவுதி படையினரை பிடித்தார்களா..?
சவுதி மீது மாபெரும் தாக்குதல் நடத்தியதாக ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் குழு வெளியிட்டுள்ள காட்சிகள் தொடர்பில் சவுதி கூட்டுப்படையின் செய்தித் தொடர்பாளர் கர்னல் துர்கி அல்-மாலிகி விளக்கமளித்துள்ளார்.
சவுதி எல்லை பகுதியில் மாபெரும் தாக்குதல் நடத்தி நகரத்தை கைப்பற்றியதாக கூறிய ஏமனின் ஹவுத்தி குழு, ஆயிரக்கணக்கான வீரர்கள் சரணடைந்ததாக தெரிவித்தது. மேலும், தாக்குதலின் போது எடுக்கப்பட்டதாக கூறி வீடியோ ஒன்றையும் ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஹவுத்தி வெளியிட்ட காட்சிகள் புனையப்பட்டவை என்று ரியாத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் சவுதி கூட்டுப்படையின் செய்தி தொடர்பாளர் அல்-மாலிகி விளக்கமளித்தார்.
மேலும், துரதிர்ஷ்டவசமாக, பிராந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளைக் வெளியிட்டுள்ளன. இது நிச்சயமாக புனையப்பட்டதாகும். ஹவுத்திகள் இதுபோன்ற நிகழ்வுகளை உருவாக்கி, ஏமன், பிராந்தியம் மற்றும் உலகில் உள்ள மக்களின் கருத்தை மாற்ற முயற்சிக்கின்றனர் என்று அல்-மாலிகி கூறினார்.
ஹவுத்தி முன்வைக்கும் ஒவ்வொரு தவறான கூற்றுக்கும் கூட்டுப்படையின் ஊடகங்கள் பதிலளிப்பது பொருத்தமானதல்ல என்றும் அவர் கூறினார்.
ஏமன் ராணுவத்தில் இருந்து சவுதி பிராந்தியத்தை குறிவைக்கும் ஹவுத்தி முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், மேலும் ஹவுத்திகள் ஏமன் நகரமான Hodeidah-வை ஏவுகணைகளை ஏவுவதற்கான தளமாக தொடர்ந்து பயன்படுத்துகின்றனர் என்றும் கூறினார்.
அம்ரான், சனா, மற்றும் சாதா ஆகிய நகரங்களிலிருந்தும் ஹவுத்திகள் ஏவுகணைகளை ஏவுகிறார்கள் என்றும் அல்-மாலிகி கூறினார்.
Post a Comment