ஐதேக - சு.க. இன்றிரவு முக்கிய பேச்சு - சஜித்திற்கு ஆதரவை பெற முயற்சி
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்தும் பேச்சுவார்த்தையின் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று ஆரம்பமாக உள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அகில விராஜ் காரியவசம் இது சம்பந்தமாக ஜனாதிபதியிடம் விடுத்த எழுத்து மூலமான கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் முதலாவது பேச்சுவார்த்தையை இன்று இரவு நடத்த ஜனாதிபதி இணங்கியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்ரம, அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் கலந்து கொள்ளும் அணியினர் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் கூட்டணியை ஏற்படுத்துவதற்காக இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பல மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் இதுவரை இணக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
Post a Comment