Header Ads



தான் சிறைச்சாலை செல்லலாம் என்பதற்காகவே, ரணில் கோத்தபாயவுக்கு சிக்கல்களை ஏற்படுத்துகிறார்

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் சிறைச்சாலை செல்ல நேரிடும் என்பதை அறிந்தே பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராகப் பல சட்ட சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளார். அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாம் வெற்றிபெறுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர்,

"ஐக்கியக் தேசியக் கட்சியின் முழு ஒத்துழைப்புடனே மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி இடம்பெற்றது. அமைச்சரவையில் உள்ள பெரும்பாலானோர் இம்மோசடியுடன் தொடர்புப்பட்டவர்கள். அவர்களே இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக அணிதிரண்டுள்ளார்கள்.

பிணைமுறி மோசடி விவகாரம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இதுவரையில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. அவ்வாறு தெரிவித்தால் கட்சியின் ஆதரவு கிடைக்காது.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி தோற்றம் பெற்றால் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார். அதன் பின்னர் தான் சிறைச்சாலை செல்ல நேரிடும் என்பதை அறிந்தே பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக பல சட்ட சிக்கல்களை மேற்கொண்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை இரத்துச் செய்வதற்கான அரசியல் சூழ்ச்சியை ஐக்கியக் தேசிய கட்சி மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியே தற்போதும் முன்னெடுக்கப்படுகின்றது.

எனினும், அனைத்துச் சவால்களையும் எதிர்கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெற்று ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தகுந்த பாடத்தைப் புகட்டும்" என்றார்.

No comments

Powered by Blogger.