பொன்சேகா மறந்துபோய் விட்டார், 225 பேரையும் சாகச்சொல்வதில் எந்தப் பிழையும் இல்லை - நாமல்
சாதாரண தரம் கூட சித்தி அடையாத ஒருவர் எப்படி நாட்டை முன்னேற்றுவார் என்று அண்மையில் கருத்து தெரிவித்த சரத் பொன்சேகா, அவருக்கு பாதுகாப்பு அமைச்சர் பதவி வழங்குவதாக சஜித் கூறியவுடன் தான் தெரிவித்த கருத்துக்ளை மறந்துபோய் விட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பகுதியில் நேற்று (13) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
அண்மையில் காலி முகத்திடலில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதன்போது ஜனாதிபதி வேட்பாளர் கூறுகிறார், சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு அமைச்சர் பதவி வழங்குவதாக, அதனை மக்கள் கை தட்டி வரவேற்றனர்.
ஆனால் இதே சரத் பொன்சேகா கடந்த வாரத்தில் சொன்னார், குறித்த ஜனாதிபதி வேட்பாளர் சாதாரண தரம் கூட சித்தி அடையவில்லை. அவரோடு கடமையாற்ற முடியாது. இவர் எப்படி நாட்டை முன்னேற்றுவார் என்று.
அந்த வேட்பாளரின் தந்தை தான் புலிகளுக்கு துப்பாக்கி வழங்கினார். அதனால் தான் பொலிஸார் 600 பேர் உயிரிழந்தனர். இப்படிப்பட்டவர் அமைச்சு பதவியை வழங்குவதாக சொன்னவுடன் பொன்சேகாவுக்கு எல்லாமே மறந்து போனது.
இதனால் தான் அரசியல்வாதிகளை இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் வெறுத்து போய் உள்ளனர். யார் மீதும் நம்பிக்கை இல்லை. 225 பேரையும் உயிரிழக்கும் படி சொல்கிறார்கள். அதில் எந்த பிழையும் இல்லை.
ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பது அது அல்ல. நாட்டின் அபிவிருத்தி, நாட்டை கட்டியெழுப்பக்கூடிய, உங்கள் எதிர்கால அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு வேலை திட்டத்தை நீங்கள் எதிர்பார்கிறீர்கள்.
அந்த வேலை திட்டத்தை செய்யக்கூடிய ஒரே ஒரு தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
Post a Comment