Header Ads



கோட்டாபயவை இலங்கை, பிரஜையாக ஏற்றுக்கொள்வதா..? 2 ஆம் திகதி உயர் நீதிமன்ற விசாரணை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்கொள்வதை தடுக்குமாறு முன்வைக்கப்பட்ட மனுவை மூன்று நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் ஒக்டோபர் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கோதகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று (30) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

குறித்த மனுவில் உள்ளடங்களும் காரணங்கள் அரசியல் ரீதியாக முக்கியமானது என்பதினால் குறித்த மனுவை மூவரங்கிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்துவது சிறந்தது என மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கோதகொட தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கோதகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் எதிர்வரும் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. 

அத்துடன் குறித்த மனுவின் பிரதிவாதிகளான குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர், ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர், உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் குறித்த அமைச்சின் செயலாளர் ஆகியவர்களை அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

பேராசிரியர் சந்திரகுப்தா தெனுவர மற்றும் காமினி விஜயங்கொட ஆகியோர் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். 

குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர், ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர், உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன, குறித்த அமைச்சின் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் இரகசிய பொலிஸ் பணிப்பாளர் ஆகியோர் குறித்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்ததாகக் கூறி இந்நாட்டு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுள்ளதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முறையான குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்காமல் இந்த கடவுச்சீட்டை அவர் பெற்றுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த மனுதாரர்கள், குறித்த கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை சட்டத்திற்கு முரணான விதத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதனால் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்குவதை தடுக்கும் விதமான உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறும் குறித்த மனுவின் விசாரணை முடியும் வரையில் குறித்த கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுத்து இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.