சஜித்திற்கு ஆதரவு தேடும், பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ள பாரியார்
அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியை பெற்றுக்கொடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களைத் திரட்டும் விசேட முயற்சியை சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரேமதாச ஆரம்பித்திருக்கின்றார்.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,
“ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் கடந்த சில தினங்களாக தொலைபேசி அழைப்பு எடுத்து ஜலனி பிரேமதாச உரையாடி வருகின்றார்.
விசேடமாக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு திரட்டும் முகமாக நாளை மாத்தறையிலும், எதிர்வரும் தினங்களில் மாவட்டங்கள் தோறும் நடத்தப்படுகின்ற மக்கள் கூட்டங்களில் கலந்துகொள்ளும்படி ஜலனி பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன், கூட்டத்திற்கு வந்து கலந்துகொள்வதற்கான உதவிகளையும் செய்துகொடுப்பதாகவும் ஜலனி பிரேமதாச கூறியிருக்கின்றார் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹினி கவிரத்ன மற்றும் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் துசித்தா விஜேமான்ன ஆகியோருடன் தொலைபேசியில் அவர் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன், மங்கள சமரவீரவினால் மாத்தறையில் சஜித் பிரேமதாசவுக்காக ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்திற்கு தவறாமல் வரும்படியும் அழைப்பு விடுத்திருக்கின்றார்.” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment