முஸ்லிம் பிரதிநிதிகள் அரசிலிருந்து வெளியேறுவது, ஆபத்தான நிலைமையொன்றாகும் - அலி சப்ரி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி தலைமையிலான அனைத்து பாதுகாப்புத்தரப்பினருமே பொறுப்பாளிகளாகின்றனர். அச்சம்பவம் குறித்த பொறுப்புக்கூறலிலிருந்து விலகிச்செல்வதற்காக முஸ்லிம் சமூகத்தினை இலக்கு வைக்கப்படுகின்றதென ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- எமது நாட்டில் வஹாப் சிந்தனைகள் அதிகரித்துள்ளதால் இஸ்லாமிய அடிப்படைவதம் வலுப்பெற்றுவருகின்றது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
பதில்:- வஹாப் சிந்தனை உடைய அனைவருமே அடிப்படைவாதிகள் என்று கூறிவிடமுடியாது. கடந்த 30ஆண்டுகளுக்குள் தான் சவூதி அரேபியாவிலிருந்து வஹாப் வாதம் இலங்கைக்குள் வந்திருக்கின்றது. வஹாப் சிந்தனை உடையவர்கள் இஸ்லாம் சமயத்தின் மீது இறுக்கமான பற்றைக்கொண்டு பின்பற்றுவார்கள். இதனை தன்னுடைய சமயத்தவர்களோ அல்லது வேறு சமயத்தவர்களோ ஏற்றுக்கொள்ளாத போது சில சமயங்களில் கருத்தியல் ரீதியான முரண்பாடுகளுக்குச் செல்வதுண்டு. ஆகவே, அத்தகைய வஹாப் சிந்தனை மூலம் தான் அடிப்படைவாதம் உருவாகின்றது என்று முழுமையாக கூறிவிட முடியாது. இஸ்லாம் 1400ஆண்டு வரலாற்றினைக் கொண்டிருக்கின்றது. காலத்திற்கு காலம் பல அறிஞர்கள் வெவ்வேறு வகையில் விளக்கங்களை வழங்கியுள்ளார்கள். சவூதி அரேபியாவிலிருந்த அபுதைமியா இறுக்கமான விளக்கமொன்றை வழங்கியிருந்தார். மத்திய கிழக்கில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் தான் அவ்வாறான விளக்கம் வழங்கப்பட்டிருந்தது. ஆகவே அவருடைய இஸ்லாமிய விளக்கங்கள் அனைத்துமே யுத்தத்தினையே அடிப்படையாக கொண்டிருந்தன.
அதன் பின்னர் அப்துல் வஹாப் என்பவர் தலைமையிலான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டபோது முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும் சரி, முஸ்லிம்களுள் வஹாப் சிந்தனைகளை எதிர்ப்பவர்களுடனும் சில முரண்பாடுகள் ஏற்பட்டன. இதற்கு துணையாக சவூதி அரேபியாவே இருந்தது. பின்னரான காலத்தில் வஹாப் சிந்தனைகள் உலகளாவிய ரீதியில் கொண்டு செல்வதற்கு மேற்குலகமே சவூதி அரேபியாவுக்கு ஆதரவாக இருந்தது. இஸ்லாமிய நாடுகளை கட்டுக்குள் வைத்திருப்பதற்காகவே அமெரிக்கா ,ஐரோப்பிய நாடுகள் அவ்வாறான ஆதரவினை வழங்கியிருந்தது. தற்போதைய சூழலில் மேற்குலத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் செல்லும் நிலைமைகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் தான் பிரச்சினைகள் அதிகமாக எழுகின்றன.
கேள்வி:- தௌஹீத் சிந்தனைகள் அடிப்படைவாதத்தினை உருவாக்குகின்றனவா?
பதில்:- தௌஹீத் ஜமாஅத்தின் சிந்தனைகளும் சாதாரண இஸ்லாத்திலிருந்து சற்று வேறுபட்டதாக இருக்கின்றது. ஆனாலும் அத்தகைய அமைப்புக்கள் அடிப்படைவாதத்தினை கொண்டிருக்கவில்லை. அத்தகைய அமைப்புக்கள் ஏகத்துவ இறைகொள்கையையே கூறுகின்றன. ஆனால் நமது நாட்டில் தௌஹீத் ஜமாஅத்தின் பெயரில் செயற்பட்டிருந்த சிறு குழுவினர் இஸ்லாம் சிந்தனைகளுக்கு அப்பால் சென்று பயங்கரவாதத்திற்கு துணைபோயிருக்கின்றார்கள்.
இஸ்லாம் சமயத்தினை இறுக்கமாக பின்பற்றும் வஹாப்வாதிகளையும், தௌஹீத் ஜமாத் அமைப்புக்கள் போன்றவற்றின் பெயர்களை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு விளக்கங்களை பலர் வழங்குகின்றார்கள். இதனால் அச்சமான நிலைமைகள் ஏற்படுத்தப்படுகின்றன.
தமிழீழம் என்ற பெயரில் செயற்பட்ட எல்லா அமைப்புக்களையும் எவ்வாறு பயங்கரவாத அமைப்புக்களாக அன்று பார்த்தார்களோ அதுபோன்று தான் தௌஹீத் என்ற பெயரில் உள்ள அனைத்து அமைப்புக்கள் மீதும் சந்தேகங்களைக் கொள்கின்றார்கள். சாதாரண இஸ்லாமியர்கள் பின்பற்றும் முறைகளிலிருந்து சற்றே வேறுபட்டதாக தௌஹீத் சிந்தனைகள் காணப்படுகின்றபோதும் அவை இலங்கை சட்டங்களுக்கு எதிரானவை அல்ல.
ஒட்டுமொத்த இலங்கைவாழ் முஸ்லிம்களில் ஆகக்கூடுதலாக 300 பேரே இந்த பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள். 25பேர் உயிரிழந்து விட்டார்கள். 90பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். 125முதல் 135பேர் வரையிலானவர்கள் துணைபோனார்கள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். தற்போது பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றே கூறவேண்டியுள்ளது.
கடந்தவாரம் புலனாய்வு கட்டமைப்புகளுடனான சந்திப்பொன்றில் பங்கு பற்றியிருந்தேன். புலனாய்வுத் தரப்பினர் வஹாப், தௌஹீத் சிந்தனை அமைப்புக்கள் பற்றிய போதிய அறிவினைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய தகவல்களின் பிரகாரம் இலங்கைக்கு உடனடி ஆபத்தொன்று இல்லை என்றே அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
கேள்வி:- மதரஸாக்கள் தொடர்பான சட்டங்கள் மீளாய்வுக்குட்படுத்தப்பட வேண்டியது அவசியமா?
பதில்:- மதரஸா என்பது பாடசாலை. அரபுமொழியில் மதரஸா எனப்படுவதால் அந்தச் சொல்லை முன்னிலைப்படுத்தி பேசுகின்றார்கள். என்னைப் பொறுத்தவரையில், மதரஸாவில் கற்பிப்பவர் யார், கற்பவர்கள் யார், எவ்வாறு பணம் கிடைக்கின்றது, அதன் செயற்றிட்டம் என்ன என்பது பற்றி அறிந்து கொள்வதற்கு அரசாங்கத்திற்கு உரிமை உள்ளது. இந்த விடயங்களை உள்ளீர்த்து ஒரு ஒழுங்கமைப்பை செய்யவேண்டியுள்ளது. அதில் பிரச்சினை இல்லை. ஆனால் திட்மிட்ட வகையில் மதரஸாக்களை முடக்கும் வகையிலான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
எமது நாட்டின் அடுத்த சந்ததியாகவிருக்கும் சிறுவர்கள் 13வருட முறைசார் கல்வியை கற்கவேண்டும். எட்டு, ஒன்பது வயதிலிருந்து குர் ஆனையும், ஹதீஸையும் மட்டும் கற்க வேண்டியதில்லை. ஏனையவற்றையும் கற்க வேண்டும். அதன்மூலமே ஒற்றுமையுடனான கூட்டிணைந்த பன்மைத்துவ சமுதாயத்தினை கட்டியெழுப்ப முடியும்.
கேள்வி:- முஸ்லிம்களின் கலாசார ஆடை சம்பந்தமாக புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது அடிப்படை உரிமைகளை மீறுவதாக பிரஸ்தாபிக்கப்படுகின்றதே?
பதில்:- முஸ்லிம்களின் கலாசார ஆடை சம்பந்தமாக நான் சற்றே மாற்றுக் கருத்துக்களை கொண்டிருக்கின்றேன். முஸ்லிம்கள் அணிய வேண்டிய ஆடை பற்றி இஸ்லாத்தில் ஒளரத் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஆண், பெண்கள் ஆடையால் மறைக்க வேண்டிய பாகங்கள் தொடர்பாக விரிவாக கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில், சவூதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஆடை முறைமைகளை பின்பற்ற வேண்டியதில்லை.
முழுமையாக முகத்தை மூடியோ அல்லது கறுப்பு நிற ஆடைகளையோ அணிய வேண்டிய அவசியம் இலங்கை முஸ்லிம்களுக்கு இல்லை. எமது நாட்டின் நியதிகளுக்கு அமைவாக ஏனைய இனங்களுடன் இணைந்து செல்வதற்காக சில மாற்றங்களை செய்யலாம். அதற்காக இஸ்லாமிய அடிப்படைகளுக்கு அப்பால் செல்ல முடியாது.
இவ்வாறுதான் ஆடை அணிய வேண்டும் என்று பிறிதொரு தரப்பினர் கூறுவதற்காக அவ்வாறான ஆடைகளை அணிய முடியாது. ஏனைய சமூகங்களுடனான இணக்கமான வாழ்வுக்காக, தேசிய பாதுகாப்புக்காக சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய முடியும். அதற்காக, ஹிஜாப், அபாயா ஆகியவற்றைக் கூட அணியக் கூடாது என்று கூறுவது இன ரீதியான பாரபட்சமாகும்.
கேள்வி:- முஸ்லிம் விவாக, விவாகரத்துச்சட்டம் போன்ற சமூகரீதியான பாரம்பரிய தனித்துவ சட்டங்களை பின்பற்றுவது தொடர்பாகவும் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றதல்லவா?
பதில்:- 1851ஆம் முஹமது ஆண்டிலிருந்து முஸ்லிம்களுக்கான சட்டங்கள் காணப்படுகின்றன. அத்தகைய பாரம்பரிய சட்டங்களை எழுந்தமானமாக மாற்றியமைக்க முடியாது. 12, 14வயதுகளில் முஸ்லிம் பெண் பிள்ளைகள் திருமணம் செய்யும் நிலைமைகளை மாற்றி திருமண வயதெல்லையை 18ஆக மாற்ற வேண்டும் என்பது எமது சமூகத்தினதும் நிலைப்பாடாகும். இதனைவிடவும் முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்வது குறித்து காணப்படும் சட்ட ஏற்பாடு பற்றியும் பேசப்படுகின்றது. இலங்கையில் உள்ள முஸ்லிம்களில் எத்தனை பேர் இரண்டு திருமணங்களை செய்துள்ளனர் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கேள்வி:- அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் நாட்டில் பொதுச்சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டுமென்பது பற்றி?
பதில்:- பொதுச்சட்டமொன்றை கட்டமைப்பதில் தவறில்லை. ஆனால் கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம், முஸ்லிம் விவாக விவகாரத்துச் சட்டம், வக்பு சட்டம் ஆகியன தனித்துவ சட்டங்களாக இருக்கின்றன. இவை பலநூறு ஆண்டுகளாக காணப்படுகின்றன. இலங்கையர்கள் என்ற அடையாளத்தினை உருவாக்குவதற்கு இந்த சட்டங்கள் தடையாக இருந்திருக்கவில்லையே. வரலாற்றை எடுத்துக்கொண்டால் காலத்துக்கு காலம் நடைபெறும் சிறு விடயங்களை பூதாகாரமாக்கி சிறுபான்மை சமூகங்கள் மீது திட்டமிட்டு தாக்குதல்களை முன்னெடுக்கும் நிலைமைகளே நடைபெற்று வருகின்றன. 1956, 1978, 1983 1987, 1989 ஆகிய வருடங்களில் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முப்பது வருடம் யுத்தம் நடைபெற்றது. பின்னர் 2014இல் அளுத்கமவில், 2018இல் திகணவில் 2019இல் குருநாகலில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு தனிப்பட்ட மனிதர்கள் இனரீதியாக சட்டத்தினை கையிலெடுக்கும் நிலைமைகளை போக்குவது பற்றி சிந்திக்க வேண்டும். பொதுச்சட்டம் பற்றி பேசக்கூடாது என்று நான் கூறவில்லை. சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி சிறுபான்மை இனங்களுக்காக காணப்படும் சிறப்பு சட்டங்களை நீக்குவதற்காக பொதுச்சட்டம் என்று கோஷமெழுப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
21 பயங்கரவாதிகளின் செயற்பாடுகளுக்காக 2மில்லியன் முஸ்லிம்களை அடக்குமுறைக்கு உள்ளாக்க முடியாது. தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளை பயன்படுத்தி அத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்கின்றபோது முற்போக்கான, நடுநிலைமை முஸ்லிம்களின் மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கு வித்திடும் நிலைமைகளே உருவாகும். அது நாட்டிற்கு ஆபத்தானது. 1983இல் விடுதலைப்புலிகளை மையமாக வைத்து அனைத்து தமிழர்களும் விடுதலைப்புலிகளே என்ற சிந்தனையுடன் செயற்பட்டதால் தான் தமிழர்கள் விடுதலைப்போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதனால் தான் மூன்று தசாப்த யுத்தமும் நடைபெற்றது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கேள்வி:- ஷரீஆ சட்டம், ஷரீஆ பல்கலைக்கழகம் உருவாக்கப்படுதல் தொடர்பில் கூறப்படுகின்றதே?
பதில்:- இலங்கையில் ஷரீஆ சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது. ஷரீஆ என்பது முஸ்லிம்கள் வாழ்வதற்கான சட்டம். அதில் சில விடயங்களை இலங்கை சட்டத்திற்கு உட்பட்டவாறே நடைமுறைப்படுத்த முடியும். அவ்வாறு தான் இங்கு ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. அதேபோன்று தான் ஷரீஆ பல்கலைக்கழகம் பற்றி கூறப்படுகின்றது. இலங்கையில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதென்றால் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அனுமதியுடன் தான் அது உருவாக வேண்டும். சட்டக்கல்வியின்போது இங்கிலாந்து, ரோம் சட்டங்களையும் கற்கின்றோம். அதுபோன்று ஷரீஆ சட்டத்தினையும் கற்க முடியும். ஆனால் அதனை கற்பிப்பதற்கான அனுமதியை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவே வழங்க வேண்டியிருக்கின்றது.
கேள்வி:- உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி நியமித்த குழு, பாராளுமன்ற தெரிவிக்குழு, எதிர்க்கட்சியின் குழு என பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இச்சம்பவத்திற்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் யார்?
பதில்:- இந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதியே. அதற்கு அடுத்து பிரதமர், பாதுகாப்புச்சபை, பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் என முழு பாதுகாப்புக் கட்டமைப்பினரும் பொறுப்புக்கூற வேண்டியவர்களாகின்றனர். 2017ஆம் ஆண்டிலிருந்தே சஹ்ரான் குறித்த தகவல்களை முஸ்லிம்களே வழங்கியுள்ளார்கள். அவருக்கு எதிராக 17 முறைப்பாடுகள் உள்ளன. 2018இல் சஹ்ரானுக்கு எதிராக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடத்தில் முறைப்பாடு பதிவாகியுள்ளது. மாவனெல்லையில் புத்தர் சிலைகள் உடைப்பு சம்பந்தமான விடயத்தில் கபீர் ஹாசீமின் செயலாளர் தஸ்லீம் புலனாய்வுப் பிரிவினருக்கு உதவியமைக்காக அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது. பின்னர் வனாத்தவில்லுவில் 75 ஏக்கர் தெங்கு தோட்டத்தில் பாரிய தொகை வெடிபொருட்கள் எடுக்கப்பட்டன. அடுத்து ஏப்ரல் 4, 11, 21காலையில் கூட எச்சரிக்கைகள் இந்தியாவால் விடுக்கப்பட்டன. இப்படியிருக்கையில், தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்காக தற்போது முஸ்லிம்கள் மீது இனரீதியான செயற்பாடுகளை முன்னெடுத்து அவதானத்தினை திசைதிருப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதியும் பிரதமரும் பொறுப்புக் கூறலிலிருந்து தவிர்ந்து செல்லவே முனைகின்றார்கள்.
கேள்வி:- முஸ்லிம் பிரதிநிதிகளின் இராஜினாமாவை எப்படி பார்க்கின்றீர்கள்?
பதில்:- முஸ்லிம் பிரதிநிதிகள் அரசிலிருந்து வெளியேறுவது ஆபத்தான நிலைமையொன்றாகும். முன்னதாக 1980முதல் 1983வரையில் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்றத்திலிருந்து வெளியேறியிருந்தது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை நீக்கினார்கள். ரோஹண விஜயவீர தலைமையிலான அணியை தடை செய்தார்கள். இவ்வாறு ஜனநாயகத்திலிருந்து விலகிச்செல்கின்ற முடிவுகளை எடுக்கின்றபோது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை கேள்விக்குள்ளாகின்றது. ஜனநாயக பிரதிநிதித்துவங்களுக்கான அங்கீகாரம் இல்லாது போகின்றது. அத்தகைய நிலைமைகள் மிகவும் ஆபத்தானவை. தற்போது கூட, அத்துரலியே தேரரின் உண்ணாவிரதமும், ஞானசாரதேரர் காலக்கெடுவும் விதித்திருந்தார்கள். இதனால் மிகவும் இக்கட்டான நிலைமைகள் ஏற்பட்டதை அடுத்தே அவர்கள் பதவிகளிலிருந்து விலகினார்கள். அவர்கள் கூறும் காரணமும் நியாயமாகவுள்ளது. ஆனாலும் இனமொன்று சார்ந்த பிரதிநிதித்துவங்களின் அம்முடிவு ஜனநாயகத்தின் நம்பிக்கை குறித்து கேள்வியை ஏற்படுத்துகின்றது.
Wahaabisamda enna ppa.....sattiyama enakku ithuwaraykkum theriyaathu...
ReplyDeleteWe know you work for MR & Co. who cares you man!
ReplyDeleteAli Sabri is well qualified talented lawyer, his answers also moderate, and it would be some more clear if he could know about Ibn Tymiyyah and Mohammed be Abdul Wahhab and towheed movements.
ReplyDeleteAnyway, overall his answers are appreciable as he is one of key persons in our community...
Bro Ali sabry, today ever I saw an interview thrre you replied perfectly, before this I was always angry with you.
ReplyDeletePure Islam without any additions.
ReplyDeleteDear Brother Ali Sabri,,, May Allah Bless you ...
ReplyDeleteI appreciate your good work toward the society. BUT I also have a kind request to you brother.
Before criticizing Sheik Muhammed inbu Abdul Wahhab (rah)..
We Should not criticize a person due to what we know all about him from his opponents writings and saying only from the history that has reached you.
Rather we should read from the writings (BOOKS) of the same person to know about him (good and bad side) and to decide whether these criticism are true or false.
My dear Brother.. You are a well educated person,, please do not depend on others to find falls of an eminent scholar in the history of Islam, who have done lots of service to our DEEN.
If you are going to make a mistake in this matter, then you will be questioned for it on the day of judgement. So I kindly request you to collect writings (BOOKS) of Sheik Muhammed Ibnu Abdul Wahaab (rah) and read it research it to find the true side of this eminent personal and then come to your conclusion.
May Allah Guide Me, You and All Muslims in correct path brother.