சிங்களவர்களின் வாக்குகளை பெறவே, மைத்திரிபால ஞானசாரரை விடுதலை செய்தார்
ஞானசார தேரரை விடுவித்ததன் மூலம் எதிர்வரும் தேர்தல்களில் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் அரசியல் நோக்கமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உள்ளது என அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சிறை தண்டனை வழங்கப்பட்ட ஞானசேர தேரர் விடுவிக்கப்பட்டுள்ளமை முழுமையான அரசியல் நோக்கத்திற்காகவேயாகும்.
தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையை செவிமடுக்காத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இனவாதம் இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் நீண்டகால குரலுக்கு பதில் வழங்காது இவ்வாறு செயற்பட்டுள்ளமை ஜனாதிபதியையும் ஒரு இனவாதியாகக் காண்பிக்கின்றது.
இதே நிலைமை தொடருமாக இருந்தால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். அத்தோடு அரசியல் கைதிகளாக சிறை தண்டனை அனுபவித்து வருபவர்களிலும் மதத் தலைவர்கள் உள்ளனர். ஜனாதிபதி ஏன் அவர்களை விடுவிக்கவில்லை?
எனவே ஞானசார தேரரை விடுவித்ததன் மூலம் எதிர்வரும் தேர்தல்களில் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் அரசியல் நோக்கமே உள்ளது.
அதே அரசியல் நோக்கத்திற்காகவே தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமலுள்ளனர் என்பதும் தெளிவாகின்றது என தெரிவித்துள்ளார்.
Post a Comment