முஸ்லிம்கள் மீதான வன்முறைகள், அவர்களை வேறு திசைக்கு தள்ளிவிடலாம் - பேரியல் அஷ்ரப்
முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள், நெருக்கடிகள் அவர்களை வேறு திசைக்கு தள்ளிவிடுமோ என்ற அச்சம் இருக்கின்றது. அதனால் இடம்பெற்ற சம்பவத்துடன் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் சந்தேகக்கண்கொண்டுபார்க்கக்கூடாது என முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்தார்.
முஸ்லிம் சிவில் அமைப்பினால் இலங்கை மன்றக்கல்லூரியில் ஏற்பாடுசெய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற மறுதினமே பாரிய இனமோதல் ஒன்று ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டிருந்தது. என்றாலும் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையின் வழிகாட்டல் மூலம் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறாமல் தடுக்கப்பட்டது. என்றாலும் எது இடம்பெறக்கூடாது என்று அனைவரும் பிரார்த்தித்தோமோ அது தற்போது தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றது. இதனையிட்டு கவலையடைகின்றேன்.
முஸ்லிம் சமுகத்துக்குள் இவ்வாறான பயங்கரவாதிகள் இருந்ததையிட்டு ஆச்சரியமடைந்தேன். அதுவும் அரசியல் ரீதியில் நான் பிரதிநிதித்துவப்படுத்திய அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது பிரதேசத்தில் பயங்கவாதிகள் குடிகொண்டிருந்துள்ளதாக கேள்விப்பட்டதும் மிகவும் வியப்பாகவே இருந்தது. அரசியல் ரீதியில் எங்களுக்குள் முரண்பாடுகள் இருந்திருக்கின்றன. ஆனால் பயங்கரவாதிகள் உருவாகுவார்கள் என்று நினைத்தும் பார்க்கவி்லலை.
பயங்கரவாத தாக்குதலுடன் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் இணைத்துப்பார்க்க கூடாது. ஒருசிலர் செய்த இந்த காரியத்தினால் முஸ்லிம் சமுகம் இன்று பாதிக்கப்பட்டு வருகின்றது.தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக சில அடிப்படைவாதிகள் ஆரம்பித்திருக்கும் வன்முறையானது வேறு பீதியை ஏற்படுத்தி வருகின்றது. பயங்கரவாத தாக்குதலுடன் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு நெருக்கடிகள் இடம்பெற்று வருகின்றன. இத்தகைய நடவடிக்கையால் சாதாரண முஸ்லிம் மக்களும் பயங்கரவாதிகளின் பக்கம் தள்ளப்பட்டுவிடுமோ என்ற அச்சம் இருக்கின்றது. அதனால் அந்த இடத்துக்கு முஸ்லிம் மக்களை தள்ளிவிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன் இந்த பயங்கரவாத அடிப்படைவாத நடவடிக்கைகளை தோற்கடிப்பதற்கு நாங்கள் அனைவரும் இலங்கையர்களாக ஒன்றிணைந்து போராடவேண்டி இருக்கின்றது என்றார்.
(எம்.ஆர்.எம்.வஸீம்)
Post a Comment