தேர்தல் அறிவித்ததன் பின்னரே வேட்பாளர் தெரிவு, கோத்தபாயவை இலகுவாக தோற்கடிப்போம்
அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்து ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச களமிறங்குவாராக இருந்தால் அது ஐக்கிய தேசிய முன்னணிக்கு சாதகமாகவே அமையும். அவரை மிக இலகுவாக தோற்கடிக்க முடியும் என அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் பேசிய அவர்,
ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை களமிறக்கத் தீர்மானித்திருப்பினும் அவரது அமெரிக்க குடியுரிமையின் காரணமாக அவரை வேட்பாளராக களமிறக்குவதில் சவால் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் அவர் தனது அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்து ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவாராக இருந்தால் அது ஐக்கிய தேசிய முன்னணிக்கு சாதகமாகவே அமையும். அவரை மிக இலகுவாக தோற்கடிக்க முடியும்.
கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவதில் ஆளும் தரப்புக்கு எந்த ஐயப்பாடும் இல்லை. அதேபோன்ற சுதந்திர கட்சியினதும் பொதுஜன முன்னணியினதும் கூட்டணி சாத்தியமற்றதாகும்.
சுதந்திர கட்சி மகிந்த தரப்புடன் இணைந்து செயற்பட தயார் இல்லை என்ற நிலைபாட்டிலேயே உள்ளது. எனவே இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகளுக்கு பாரிய சவாலினை ஏற்படுத்தும் எனறே எதிர்பார்க்கிறோம்.
அதேபோன்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தன. ஆனால் இன்னும் எங்களின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கவில்லை.
தேர்தல் அறிவித்ததன் பின்னரே வேட்பாளரை தெரிவு செய்வதற்கு ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. ஆனால் இம்முறை தெரிவு செய்யப்படுபவர் நிச்சிமாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் அல்லது கட்சியை சார்ந்தவராகவே இருப்பார் என்றார்.
Post a Comment