பள்ளிவாசலில் கலந்துரையாடலில், ஈடுபட்டிருந்த 6 பேர் கைது
(எம்.எப்.எம்.பஸீர்)
தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்களுக்காக 9 தற்கொலை குண்டுதாரிகள் வந்துள்ளமையை விசாரணையாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தலமையில் இடம்பெறும் விசாரணைகளிலேயே இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 8 தற்கொலைதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் விசாரணைகளில் அவர்கள் தொடர்பிலான அனைத்து தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்த அடையாளம் காணப்பட்ட எட்டு பேரில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்கடடினார். அப்பெண்ணே தமட்டகொடை சொகுசு வீட்டில் தற்கொலை தாக்குதலை நடத்தியதாக சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் இந்த தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக கருதபப்டும் தேசிய தெளஹீத் ஜமாத் எனும் அமைப்பின் தலைவர் மொஹம்மட் சஹ்ரான் அல்லது சஹ்ரான் ஹாசிம் என்பவர் இதன்போது தற்கொலை குண்டுதரையாக செயற்பட்டு உயிரிழந்தாரா இல்லையா என்பது மட்டும் மாலை வரை உறுதி செய்ய முடியாதிருந்ததாக விசாரணைகளை கையாளும் உயர் பொலிஸ் அதிகாரின் ஒருவர் தெரிவித்தார்.
இந் நிலையில் இந்த தொடர் தற்கொலை குண்டுத்தககுதல்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் நாட்டின் பல பகுதிகளிலும் சுமார் 70 இற்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் பிரதான விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவு 32 பேரை கைதுசெய்து விசாரித்து வருகின்றது. இதனைவிட பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு நான்கு சந்தேக நபர்களை கைதுசெய்து விசாரித்து வருகின்றது. இதற்கு மேலதிகமாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அளுத்கம, பேருவலை, கட்டான பகுதிகளிலும் கைதுகள்
இதேநேரம் நேற்று இரவோடிரவாக மேலும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அளுத்கம பகுதியில் பள்ளிவாசல் ஒன்றில் கலந்துரையாடலில் இருந்த ஆறு பேர் அளுத்கம பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பேருவளையில் 5 பேரும் , நீர்கொழும்பு - கட்டான பகுதியில் நலவரும் கைதுசெய்யப்பட்டனர்.
Post a Comment