Header Ads



தென்னைமரத்திற்கு கீழ், கொட்டிலில் ஒதுங்கியவர்களை மின்னல் தாக்கியது - 3 பேர் மரணம்

யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கியதில் இரு சகோதரர்கள் உட்பட மூவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு  ( 218) பகுதியிலேயே மின்னல் தாக்கி மூன்று பேர் இறந்துள்ளனர். 

தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்துவரும் நிலையில் சுன்னாகம் குப்பிளான், மயிலங்காடு பகுதியில் இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

சகோதரர்களான திருநாவுக்கரசு கண்ணன் (வயது- 48), கந்தசாமி மைனாவதி (வயது 52) மற்றும் ரவிக்குமார் சுதா (வயது 38) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

தமது புகையிலைத் தோட்டம் ஒன்றில் நான்கு பேர் வேலை செய்துகொண்டிருந்துள்ளனர். இதன்போது ஒருவர் மதிய உணவு எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். ஏனையோரில் ஆண் ஒருவரும் இரண்டு பெண்களும் வேலைசெய்துகொண்டிருந்தனர்.

அதன் போது திடீரென மழை பெய்த காரணத்தினால் அருகில் இருந்த தென்னைமரத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த கொட்டிலில் அவர்கள் மூவரும் ஒதுங்கியுள்ளனர்.

இதன் போது இடி மின்னல் அந்தத்  தென்னை மரத்தின் மீது விழுந்ததில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உணவு எடுக்கச் சென்றவர் திரும்பி வந்த போதே மூன்று பேரும் மின்னல் தாக்கி இறந்துள்ளமை தெரியவந்துள்ளது.



No comments

Powered by Blogger.