சர்ச்சையை கிளப்பியுள்ள, திமுத் கருணாரட்ன
இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் திமுத் கருணாரட்னவிற்கு பிணை வழங்கப்பட்டமை குறித்து பொலிஸ் மா அதிபர் கவனம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
குடி போதையில் வாகனத்தைச் செலுத்தி விபத்து ஒன்றை சம்பவித்தமை தொடர்பில் திமுத் கருணாரட்ன இன்று அதிகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட திமுத் கருணாரட்ன பொலிஸ் பிணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த விபத்தில் சிக்கிய நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பிணையில் செல்ல அனுமதி அளிக்காமல் இருந்திருக்கலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பிணை வழங்காது நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவது உசிதமான நடவடிக்கையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிணை வழங்கும் போது மோட்டார் போக்குவரத்துப் பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவிற்கும் இது குறித்து அறிவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும் விபத்தில் சிக்கியவர் மேலதிக விசாரணைகள் அவசியமில்லை என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளைய தினம் திமுத் கருணாரட்ன நீதிமன்றில் முன்னிலையாவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்னதாக ஜே.வி.பி.யின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான கே.டி. லால்காந்த குடி போதையில் விபத்து ஒன்றை சம்பவித்த போது அவரை கைது செய்து விளக்க மறியலில் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment