ஜனாதிபதிக்கு கைகொடுக்க தயார் - ஐதேக வுடன் இணையுமாறு ராஜித அழைப்பு
பொதுஜன முன்னணியினரே இன்று ஜனாதிபதியை தாக்க ஆரம்பித்துள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியும் ஜனாதிபதியை தாக்காது எனத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதியை பாதுகாத்து ஆட்சியை கொண்டுசெல்ல தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
பொதுஜன முன்னணியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தலைமைத்துவமாக கொண்டு முன்னோக்கி செல்ல தயாராக இல்லை. இந்த காலப்பகுதியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியலை ஓரங்கட்டி மீண்டும் ராஜபக்ஷ யுகத்தை உருவாக்கவே பொதுஜன பெரமுனவினர் தீர்மானித்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைதிரிபால சிறிசேனவுடன் நாம் ஒன்றிணைந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் ஆட்சியை உருவாக்கினோம், ஜனநாயக ரீதியில் சரியாக ஆரம்பிக்கப்பட்ட ஆட்சியில் இடை நடுவே சில முரண்பாடுகள் ஏற்பட்டு ஜனாதிபதி இணையக்கூடாத கூட்டணியில் இணைந்து இன்று அவர் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஆனால் இந்த முரண்பாடுகள் அனைத்திற்கும் ஜனாதிபதியின் தவறான புரிதலே காரணமாகும். இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட பொதுஜன முன்னணியினர் இன்று அவர்களின் கரம் ஓங்கியுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்ட தீர்மானித்துள்ளனர்.
பொதுஜன பெரமுனைவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கே தாக்குதல் நடத்துகின்றனர். ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷ என்பதை கூறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முழுமையாக வீழ்த்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இவ்வாறான நிலையில் ஐக்கிய தேசிய கட்சியாக நாமும் ஜனாதிபதியை தாக்க தயாராக இல்லை. அவர் நெருக்கடியில் உள்ளார்.
எனவே அவருக்கு கைகொடுக்க நாம் தயாராகவே உள்ளோம். எம்முடன் ஜனாதிபதியை இணைந்துக்கொண்டு பயணிக்க நாம் தயார். ஜனாதிபதி மீண்டும் எம்முடன் இணைய வேண்டும். அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பலர் தயாராக உள்ளனர். ஆகவே இப்போது தீர்மானம் ஜனாதிபதியின் கைகளில் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment