"சம்பிக்க வழங்கிய காணியே எமக்கு வேண்டும் - இல்லையேல் பள்ளிவாசலை அகற்ற நாம் தயாரில்லை"
தம்புள்ளை புனித பூமி எல்லைக்குள் அமைந்துள்ள தம்புள்ளை பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து அகற்றிக்கொண்டு வேறு ஓர் இடத்தில் நிர்மாணிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று கடந்த வெள்ளிக்கிழமை தம்புள்ளை ஓய்வு விடுதியில் (ரெஸ்ட் ஹவுஸ்) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபையின் பிரதிநிதிகள், தம்புள்ளை மேயர் ஜாலிய ஓபாத ஆகியோர் கலந்து கொண்டனர். வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
தம்புள்ளை ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினரும் மாத்தளை, இரத்தோட்டை, தொகுதிகளுக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் அமைப்பாளருமான எஸ்.வை.எம். சலீம்தீன் கருத்து தெரிவிக்கையில்;
‘தம்புள்ளை மேயர் தம்புள்ளையிலிருந்தும் 19 கிலோ மீற்றர்களுக்கு அப்பாலுள்ள நிக்கவட்டவன பகுதியிலே தம்புள்ளை பள்ளிவாசலை நிர்மணிக்க காணியொன்று தருவதாக கூறுகிறார்.
பள்ளிவாசல் ஐவேளை தொழுவதற்கு வசதியாக தம்புள்ளையிலேயே அமைய வேண்டும். அதனால் தம்புள்ளையிலேயே காணி வழங்கப்பட வேண்டும். நிக்கவட்டவன பகுதிக்கு பள்ளிவாசலை அகற்றிக்கொள்ள நாம் தயாராக இல்லை.
முன்னாள் அமைச்சர் சம்பிக்கரணவக்கவினால் ஏற்கனவே காணியொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. அக்காணி பள்ளிவாசலிலிருந்து 150 மீற்றர்களுக்கப்பால் புனித பிரதேச எல்லைக்கு வெளியே அமைந்துள்ளது. அக்காணியே எமக்கு வழங்கப்பட வேண்டும். இல்லையேல் பள்ளிவாசலை ஒரு அங்குலமேனும் அகற்றிக்கொள்ள நாம் தயாராக இல்லை.
இவ்விகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளோம் என்றார்.
Post a Comment