Header Ads



சடலம் மீது, சத்தியம்செய்த மைத்திரிபால

சட்டவிரோதமான அடிப்படையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பில் இல்லாத ஓர் அதிகாரத்தை பயன்படுத்தியே ஜனாதிபதி நாடாளுமன்றை கலைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது குறித்து அலரி மாளிகையில் நேற்று நள்ளிரவு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி மற்றும் சட்டவிரோத பிரதமரின் முதல் சட்டவிரோத முயற்சி தோல்வியடைந்துள்ளது. 113 உறுப்பினர்களை காண்பிக்க முடியும் என வாய்சவடால் விட்ட போதிலும் அதனை செய்து காண்பிக்க முடியவில்லை, அதனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

முதல் போட்டியில் அவர்கள் தோல்வியடைந்துள்ளனர். தற்போதைய அரசியல் அமைப்பின் அடிப்படையில் நாடாளுமன்றை கலைப்பதற்கு எவ்வித அதிகாரமும் ஜனாதிபதிக்கு கிடையாது.

நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்துவதில்லை என கூறியே அப்போது இந்த ஜனாதிபதி, சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறியிருந்தார். தன்னால் நியமிக்கப்பட்டவர்களை ஜனாதிபதி இன்று பழிவாங்குகின்றார், தன்னை தோற்கடிக்க நினைத்தவர்களுடன் இணைந்து கொண்டுள்ளார்.

இவ்வாறான ஓர் ஜனாதிபதியை உலக சரித்திரம் பார்த்திருக்காது. சர்வாதிகார ஜனாதிபதிகள் கூட எதிரிகளுடன் இணைந்து நண்பர்களை தாக்கியதில்லை. தேர்தலை எதிர்நோக்க தயார், தேர்தலை நிறுத்தவும் நாம் தயார்.

விரிவான ஜனநாயக கூட்டணி ஒன்றை உருவாக்கி இந்த தரப்புக்களை தோற்கடிப்போம். இந்த அரசாங்கத்தை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளவில்லை. இது 21ஆம் நூற்றாண்டு. சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இன்றி ஆட்சி நடத்த முடியாது.

தேர்தலுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமாயின் அது நாடாளுமன்றின் ஊடாகவே செய்யப்பட வேண்டும். வேறு வழியில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமாயின் நாடாளுமன்றின் ஊடாகவே அதனையும் செய்ய வேண்டும்.

மாதுலுவே சோபித தேரரின் பூதவுடல் மீது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சத்தியம் செய்திருக்கின்றார்.

எனினும் இல்லாத அதிகாரங்களையும் மைத்திரி பயன்படுத்துகின்றார். மஹிந்த ராஜபக்ச கூட இல்லாத அதிகாரங்களை பயன்படுத்தியது கிடையாது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.