நெருக்கடிக்கான முழு பொறுப்பையும், மைத்திரி ஏற்க வேண்டும் - குமார வெல்கம
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கான முழு பொறுப்பினையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவும் இதற்கு பங்குதாரராக காணப்படுகின்றார் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று -29- இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வை அரசாங்க தரப்பினர் புறக்கணித்திருந்தனர். இதன்போது கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஐக்கிய தேசிய கட்சியினர் தங்களின் பெரும்பான்மை பலத்தினை பலமுறை நாடாளுமன்றத்தில் நிரூபித்து விட்டனர்.
எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில விடயங்களை முறையாக நிறைவேற்றுங்கள் என்று வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை நிராகரித்து விட்டார்.
எவ்வாறாயினும், பெரும்பான்மை பலம் உள்ளவர்களிடம் ஆட்சியினை ஒப்படைத்து விட்டு எதிர்க்கட்சியாக செயற்பட்டால் மத்திரமே தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு ஒரு தீர்வு கிடைக்கப் பெறும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment