Header Ads



மஹிந்தவுக்கு எதிரான மனு, 30 ஆம் திகதி விசாரணை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு எதிர்வரும் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அரசியலமைப்பு எதிராக மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையினால், அவருடைய பதவியை ரத்து செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவே விசாரிக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த 122 உறுப்பினர்களினால் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த மனுவை எதிர்வரும் 30 திகதி மற்றும் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் குறித்த மனுவின் பிரதிகளை பிரதிவாதிகளுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களின் சட்டத்தரணிகளுக்கு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என சபாநாயகரினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் அரசியலமைப்பின் 13 திருத்தத்தின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருக்க சட்ட ரீதியான உரிமை இல்லை என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 49 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.