Header Ads



இலங்கைக்கு வருகிறது ரோபோ

நோர்வேயில் காணப்படும் ரொபோ தொழிநுட்பத்துடன் கூடிய களஞ்சியமொன்றை நிர்மாணிப்பதற்கான பின்புலம் உருவாகியுள்ளதாக கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜயமுனி செய்சா சுட்டிக் காட்டினார்.

நோர்வே நாட்டுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒஸ்லோ நகர எக்ஸ் எக்ஸ் எல் (XXL) களஞ்சிய வளாகத்தில் ரொபோ தொழிநுட்பம் மூலம் செயற்படுத்தப்படும் களஞ்சிய நடவடிக்கைகளை நேற்று பார்வையிட்டார்.

எலிமன்ட் லொஜிக்ஸ்மற்றும் டிக்ரி (TIQRI) ஆகிய தொழிநுட்ப நிறுவனங்களின் வழிகாட்டலுடன் இந்த ரொபோ தொழிநுட்பச் செயற்பாடுகள் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படுவதுடன், இதனூடாக மிகவும் விரைவாகவும் வினைத்திறன் மிக்க வகையிலும் களஞ்சியப்படுத்துவதற்கும் அவற்றைப் பொதியிட்டு மீண்டும் கப்பலேற்றுவதற்குமான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆடைகள், ஏனைய தயாரிப்புகள், மீன்கள், மரக்கறிகள், பழங்கள் என்பவற்றையும் இவ்வாறு களஞ்சியப்படுத்தவும், பொதியிடவும் முடியும் என இதன்போது பிரதமருக்கு எடுத்துக் காட்டப்பட்டது.

மீன்பிடித்துறையின் அபிவிருத்திக்கு இவ்வாறான களஞ்சியங்களை நிறுவுவது தொடர்பாக ஏற்கனவே அடிப்படைத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிலையிலேயே  இந்த நிறுவனங்களுடன் இணைந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கையிலும் இவ்வாறான ரொபோ தொழிநுட்பத்துடன் கூடிய களஞ்சியமொன்றை நிர்மாணிப்பதற்கான பின்புலம் உருவாகியுள்ளதாக கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜயமுனி செய்சா சுட்டிக் காட்டினார்.

இந்த நிகழ்வில் பேராசிரியர் மைத்திரீ விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ஹேஷா விதானகே உட்பட இலங்கைப் பிரதிநிதிகள் இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.