Header Ads



மோடி கடும் ஏமாற்றம், மன்னிப்பு கோரிய ரணில் - மூடிய அறைக்குள் தனியாகப் பேச்சு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், மூடிய அறைக்குள் தனியாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் ஹவுசில், நேற்று பிற்பகல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்கா பிரதமர் சந்தித்தார்.

சிறிலங்கா பிரதமருடன், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் இந்தச் சந்திப்புக்காக சென்றிருந்தனர்.

இரண்டு நாடுகளின் பிரதமர்களும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து இருதரப்புப் பேச்சுக்களை நடத்தினர்.

அதற்குப் பின்னர், இந்தியப் பிரதமர் மோடி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மூடிய அறைக்குள் தனியாக பேச்சு நடத்தினர்.

இதன்போது மிக முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை.

நேற்றைய சந்திப்பின் பின்னர் இரண்டு நாடுகளின் தலைவர்களும், ஊடகவியலாளர்களுக்கு எந்தக் கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

2

இரண்டு நாடுகளும் இணங்கிக் கொள்ளப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை, சிறிலங்கா அரசாங்கம் தாமதப்படுத்தி வருவதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடும் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் புதுடெல்லியில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுக்களின் போதே, இந்தியப் பிரதமர் தமது அதிருப்தியையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார் என்று புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், செய்து கொள்ளப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா காட்டி வரும் தாமதம் குறித்தே இந்தியப் பிரதமர் தீவிரமான, ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளார்.

இராஜதந்திர விவகாரங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பெரும் பகுதியை, சிறிலங்கா விவகாரங்களுக்காக தாம் செலவழித்துள்ளதாகவும், இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்திய அரசாங்கத்தினால்  வழங்கப்பட்ட உதவி தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடு தமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தன்னைக் குறித்தோ, இந்திய அரசாங்கம் குறித்தோ, ஏதேனும், கரிசனைகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் அதனை தயக்கமின்றி கலந்துரையாடுமாறும், சிறிலங்கா பிரதமரிடம் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தின் போது, இந்தியப் பிரதமர் மோடி மீதோ அவரது அரசாங்கத்தின் மீதோ-  தாமோ அல்லது இலங்கையர்களோ, எந்தச் சந்தேகத்தையும் அல்லது பிரச்சினையையும் கொண்டிருக்கவில்லை என்று சிறிலங்கா பிரதமர் பதிலளித்துள்ளார்

அத்துடன், ஏதேனும் தவறான புரிதலை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக இந்தியப் பிரதமரிடம் மன்னிப்பைக் கோருவதாகவும், ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

காத்மண்டுவில் அண்மையில் இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்து சிறிலங்கா அதிபருடன் பேசிய போது,  2017 புரிந்துணர்வு உடன்பாடு தொடர்பான எல்லா விவகாரங்கள் குறித்தும்  கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும், இந்தியப் பிரதமர் இந்தச் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

இதன் போது இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சிறிலங்கா பிரதமர்,  அபிவிருத்தித் திட்டங்களை மூல இலக்குடன் மீண்டும் முன்னகர்த்த தேவையான நடவடிக்கைகளைத் தாம் துரிதமாக எடுப்பதாக இந்தியப் பிரதமரிடம் உறுதியளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.