Header Ads



அலிஸ்டர் குக் என்ற 24 கரட் தங்கம்

 அலெஸ்டர் குக் புகழ் வெளிச்சத்தில் பிரகாசமாக மின்னினார். ஆனால், அப்புகழ் மழை அவரை மயக்கவில்லை. அவரது கிரிக்கெட் வாழ்க்கையானது தனித்துவமிக்கதாகவும், அட்டகாசமானதாகவும் இருந்தது.

குக்கின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை விவரிக்க வேண்டுமானால் 2006 முதல் 2018 வரையிலான 12 வருடங்களை உற்றுநோக்க வேண்டும். கிரிக்கெட் உலகில் இக்காலகட்டத்தில் புதிய தலைமுறையின் பிரதிநிதியாக விளங்கினார் குக். அவர் பயணித்த பாதையில் பயணம் செய்தவர்கள் மிகக்குறைவு.

அவர் பேஸ்புக்கில் இல்லை; ட்விட்டர் கணக்கும் கிடையாது; இன்ஸ்டாகிராமிலும் அவருக்கு கணக்கு இல்லை. ஆகவே, எத்தனை ஃபாலோயர்களை வைத்திருக்கிறார் என பேசுவதற்கே இடமில்லை. சமூக ஊடகத்தில் ஒரு பதிவு போடுவதற்காக அவர் எவ்வளவு கோடிகள் சம்பாதிக்கிறார் என்றும் கேட்க முடியாது.

அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து புகைப்படங்கள், காணொளிகள் ஏதேனும் பகிர்ந்திருக்கிறாரா என நீங்கள் தேடினால், உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

குக் தனது தலைமுடிக்கு ஜெல் போடுவதில்லை; விசித்திரமான ஹேர்ஸ்டெயில் செய்துகொள்வதில்லை; உடலில் டாட்டூக்களை குத்திக்கொள்வதில்லை; டிஜெ பாடல்கள் கேட்பவரும் அல்ல; பிரபலமான தோழிகளும் அவருக்கு இல்லை; யாருடனாவது டேட்டிங் சென்றார்; எந்த பெண்ணுடனாவது உறவை முறித்துக் கொண்டார் என்ற கிசுகிசுக்களும் எழவில்லை. குடித்துவிட்டு இரவில் ஏதாவதொரு மதுபான விடுதியில் தகராறு செய்ததாக அவர் மீது புகார்களும் கிடையாது; வேகமாக வண்டி ஒட்டி சென்றார் எனக்கூறி அவருக்கு காவல்துறை இதுவரை அபராதம் விதித்ததுமில்லை.

கிரிக்கெட் களத்தில் மற்ற வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை. பந்தைச் சேதப்படுத்துதல் முதலான எந்தவொரு இழிவான செயல்களிலும் அவரது பெயர் அடிப்பட்டது கிடையாது. போட்டியிலோ அல்லது போட்டி முடிந்தபிறகோ யாரையாவது குத்தலாக பேசுவதோ அல்லது தன்னை முன்னிலைப்படுத்தி உயர்த்தி பேசியதுமில்லை.

இங்கிலாந்து அணியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை மிக இளம் வயதிலேயே துவங்கினார். தற்போது தனது 33-வது வயதில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அவர் தன்னை ஜாம்பவானாக்கிக் காண்பித்திருக்கிறார்.

12 வருடங்களுக்கு முன்னதாக இந்த கதை துவங்கியது. அப்போது 2006-ம் வருடம். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருக்கிறது இங்கிலாந்து அணி. மார்கஸ் டிரஸ்கோதிக் இங்கிலாந்தின் நம்பகமான தொடக்க வீரராக விளங்கினார். ஆனால் மன ரீதியான பிரச்சனை காரணமாக இத்தொடரில் இருந்து விலகினார். இங்கிலாந்துக்கு டிரஸ்கோதிக்கின் இழப்பு பேரிடியாக இறங்கியது.

அது மார்ச் மாதம். வெயிலின் தாக்கம் எகிறிக்கொண்டிருந்த நிலையில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஆகவே இங்கிலாந்து கடும் நெருக்கடியில் சிக்கியிருந்தது.

தொடக்க வீரராக யாரை களமிறக்கலாம் என தேர்வுக்குழு ஆலோசனை நடத்தியதில் இறுதியாக அந்த பட்டியலில் முதலிடத்துக்கு வந்தவர் அலெஸ்டர் குக். ஆனால் ஒரு பிரச்னை என்னவெனில் அப்போது 21 வயது குக் இங்கிலாந்து அகாடமி அணிக்காக வெஸ்ட் இண்டீஸில் விளையாடிக்கொண்டிருந்தார். ஆனால் தேர்வுக்குழு குக் தான் வேண்டும் என முடிவில் உறுதியாக இருந்தது. இதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் குக்கை அழைத்து.

இந்தியாவுடனான தொடர் துவங்குவதற்கு வெகு சில நாட்களே இருந்தநிலையில் விசா உள்பட அனைத்து தொழில்நுட்ப ரீதியான சம்பிரதாய முறைகளையும் முடித்தபிறகு வெவ்வேறு நேர மண்டலங்களையும் கடந்து மும்பை வழியாக நாக்பூரை சென்றடைந்தார். விமான பயண களைப்பு காரணமாக அவர் ஓய்வெடுக்கவில்லை மாறாக பயிற்சியில் ஈடுபட்டார். அடுத்த சில மணிநேரங்களில் அவர் இங்கிலாந்தின் தேசிய கிரிக்கெட் அணியின் வீரரானார்.

நன்றாக சவரம் செய்யப்பட்ட முகம், நல்ல உயரம், பெரிய ஹெல்மெட்டோடு கைகளின் பாதுகாப்பாக அணியப்படும் பட்டையை அணியாதநிலையில் களத்தில் காலடி எடுத்துவைத்தார் குக். அவர் நின்றதை பார்க்கும்போது பேஸ்பால் வீரர் போல இருந்தது.

முதல் இன்னிங்சில் 60 ரன்கள் குவித்தார். இவருக்குள் ஏதோ நல்ல திறமை இருக்கும் போல என நாக்பூர் மைதான பத்திரிகையாளர்கள் அறையில் முணுமுணுப்பு கேட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்த இளம் வீரர் சதமடித்ததும் கிரிக்கெட் ரசிகர்கள் மெய்மறைந்தனர். தொடக்க போட்டியிலேயே சதமடிப்பது, அதுவும் இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிராகவும் குறிப்பாக கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் போன்ற சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளாசியது சாதாரண காரியமல்ல. ஆனால் குக் தன்னால் களத்தில் நிற்க முடியும் என்பதை வெளிக்காட்டிய நாள் அது.

அன்றைய தினம் முதல் குக் தனது பாதையில் ஒரு துறவியை போல நேர்மையுடனும் பயணிக்கத் துவங்கினார். கடந்த 12 வருடங்களாக அவரது மட்டையில் இருந்து ரன் மழை பொழிகிறது.

குக் ஏன் தனித்துவமிக்க சிறப்பான வீரர் தெரியுமா? அவர் கடுமையான நெருக்கடி மிக்க சூழ்நிலைகளில் சக வீரர்களுடன் இணைந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருக்கிறார்.

குக்குடன் அந்த டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக வெள்ளை ஜெர்சியில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நுழைந்தவர் இந்திய வீரரான ஸ்ரீசாந்த். அவரும் தனது கிரிக்கெட் வாழ்க்கையை நன்றாகத் தான் துவக்கினார் ஆனால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார். மேலும் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் சிக்கி வாழ்நாள் தடை பெற்றார். இதே போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வை துவங்கிய இன்னொரு வீரரின் பெயர் மான்டி பனீசர்.

இங்கிலாந்துக்காக ஆடிய பனீசர் ஆரம்பகட்டத்தில் அச்சுறுத்தல்தரும் பந்துவீச்சாளராக தனது கிரிக்கெட் வாழ்வை துவங்கினார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரது நடத்தை சரியில்லாமல்போக, நல்லதொரு பாதையை தொலைத்தார்.

இதே டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மற்றொரு வீரர் இயான் பிளாக்வெல். அவருக்கு இதுதான் அறிமுக டெஸ்ட் போட்டியாகவும் கடைசி டெஸ்ட் போட்டியாகவும் அமைந்தது.

மூன்று வீரர்கள் ஒரு புறமிருக்க, குக் இன்னொரு பக்கத்தில் ஜொலித்தார். 12 வருட கிரிக்கெட் வாழ்வில் 33 வயது குக் 32 சதங்களை விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 12,254 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் குமார் சங்ககாரா, ராகுல் திராவிட், ஜேக்ஸ் காலிஸ், ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர்தான் குக்கை விட முன்னிலையில் இருப்பவர்கள். குக் எப்படிப்பட்ட விளையாட்டை விளையாடியிருக்கிறார் என்பதை மேற்கண்ட இந்த ஐந்து பெயர்கள் கூறும்.

கடந்த சில வருடங்களாக குக், டெண்டுல்கரின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் எனும் சாதனையை முடியடிக்கக்கூடும் என்ற செய்தி அடிக்கடி வலம் வந்தது. ஆனால் குக்கின் ஒரு சாதனை குறிப்பிடத்தக்கது. கடந்த 12 வருடங்களில் தொடர்ந்து 158 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதாவது இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானத்தில் இருந்து அவர் ஒரு டெஸ்ட் போட்டியையும் தவறவிட்டதில்லை.

அவரது ஆட்டத்திறன் அல்லது உடல்திறன் நிலையாக இருந்ததால் அணியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லாமல்போனது. முன்னதாக இந்த உலக சாதனையை செய்திருந்தவர் ஆலன் பார்டர். ஒரு ஜாம்பவானின் சாதனையை குக் என்ற இன்னொரு ஜாம்பவான் முறியடித்திருக்கிறார். எண்களில் இந்த சாதனையை குறிப்பிடுவது படிக்கும்போது கவர்ச்சிகரமானதாக இருக்கலாம் ஆனால் உண்மையில் மிகவும் கடினமான மகத்தான சாதனை இது.

ஒரு பேட்ஸ்மேனின் பணி ரன்கள் குவிப்பது. உலகில் அனைத்து பேட்ஸ்மேன்களும் இதைச் செய்கிறார்கள். பிறகு, குக் ஏன் சிறப்பானவர் என சிலர் கேட்கலாம். கேள்வி கேட்பதற்கு முன்னதாக அணியில் குக்கின் பணி குறித்து புரிந்துகொள்ள வேண்டும். குக் தொடக்க வீரராக களமிறங்கினார். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் புத்தம்புதிய சிகப்பு பந்தை எதிர்கொள்ள ஒரு வீரருக்கு தனி திறமை தேவை.

ஒன்றரை நாள்கள் ஃபீல்டிங் செய்தபின்னர் உடல் தளர்ந்தாலும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் அல்லது ஆட்டத்தின் முதல் நாளில் முழு தெம்புடன் பந்துவீசவரும் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு வீரருக்கு பிரத்யேக திறமைஇருந்தால்தான் சாதிக்க முடியும்.
தன்னிடம் இருக்கும் தவறுகளை எதிரணி கண்டுபிடித்து தன்னை ஆட்டமிழக்கச் செய்துவிட்டால் கிரகாம் கூச்சிடம் சென்று தனது தவறுகள் குறித்து விவாதித்து, அதன் பின்னர் கடும் பயிற்சி வாயிலாக அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் சிறப்பாக ரன்கள் குவிப்பது அவரது வழக்கம்.

அனைவருமே உள்ளூர் ஆடுகளங்களில் ரன் குவிப்பவர்கள்தான். ஒரு பேட்ஸ்மேனுக்கு உண்மையான சோதனை என்னவெனில் அயல்நாட்டில் தனது திறனை வெளிப்படுத்துவது. குக் இச்சங்கதியில் சிறந்தவர் என்பதை ஆதாரங்கள் காட்டுகின்றன.

இந்தியா, இலங்கை, வங்கதேசம் போன்ற இடங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆசிய துணை கண்டத்தில் பொதுவாக பிட்சில் பந்துகள் நன்றாக திரும்பும். ஆகவே காலை முன்னோக்கி நகர்த்தி விளையாடுவதா அல்லது பின்னோக்கி நகர்த்தி விளையாடுவதா என முடிவு செய்ய பேட்ஸ்மேனுக்கு நேரம் பிடிக்கும். சுழல்பந்து வீச்சாளர்களை ஐந்து நாளும் எதிர்கொள்வதென்பது ஒரு புதிர் போன்றதாகவே இருக்கும்.

இதில் வெயில் காலம் என்றால், குளிர்பிரதேசத்தில் இருந்து வந்திருக்கும் இங்கிலாந்து வீரர்களுக்கு மொத்த சக்தியும் விரைவாக தீர்ந்துவிடும். ஆனால் குக் இது போன்ற சூழ்நிலைகளில் எளிதாக ரன்கள் குவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு கிரிக்கெட்டில் எதிரி ஆஸ்திரேலியா. பொதுவாக ஆஸ்திரேலிய மைதானங்களில் பிட்ச் குளிர்ந்திருக்கும். இதுபோதாதன்று ஆஸ்திரேலியர்கள் வீரர்களை வம்புக்கிழுப்பதில் நன்றாக அறியப்பட்டவர்கள் என்பதால் அதையும் சமாளிக்க வேண்டும். இவ்விடங்களில் குக் சிறப்பாக விளையாடியிருக்கிறார்.

அவரை சீண்டும் வார்த்தைகளை பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் கவனம் குவித்து ரன்கள் குவித்திருக்கிறார்.

நியூசிலாந்தில் பந்து நன்றாக எழும்பும். அங்கே அதிகபட்ச குளிரும் கடுமையான குளிர் காற்றும் வேறு இருக்கும். இந்த சூழ்நிலைகளும் குக் எனும் ரன் மெஷினை தடுத்து நிறுத்தமுடியவில்லை.
தென் ஆப்ரிக்காவில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசுவார்கள். அனால் குக் தனது வேலையை செவ்வனே செய்வார்.

கரீபியன் தீவுகள் உலகின் இன்னொரு மற்றொரு பகுதியில் இருக்கிறது. இங்கே பெரிய பேட்ஸ்மேன்களே குழப்பமடைவார்கள். அங்கே வெற்றிகரமாக விளையாடியிருக்கிறார்.


இங்கிலாந்தில் குக் ஒரு ரன் மெஷின். அவர் லாரா அல்லது ஜெயவர்தனே போல அழகான பாணியில் விளையாடுபவரல்ல; பாண்டிங் அல்லது சங்கக்காரா போன்ற ஆதிக்கம் செலுத்தும் பேட்ஸ்மேன் அல்ல. அவருடைய ஆட்டம் கிரிக்கெட்டின் அழகியலில் புதிதாக எதையும் சேர்க்காமல் இருந்திருக்கலாம் ஆனால் அவர் நம்பகமான பேட்ஸ்மேனாகவும் அதிக ரன்கள் குவித்தவராகவும் விளங்கியிருக்கிறார். தனது பொறுப்பை கடந்த 12 வருடங்களாக சிறப்பாக செய்திருக்கிறார். BBC

1 comment:

  1. One of the greatest legend in cricket history

    ReplyDelete

Powered by Blogger.