Header Ads



'ஸ்மாட் போன்' ஆபத்திலிருந்து, பிள்ளைகளை காப்பாற்றுவோம்

வீட்டுப்பாடம்,பரீட்சை நேரஅட்டவணை எல்லாமே இப்போது பாடசாலையின் 'வட்ஸ்அப் குரூப்' வழியே வர ஆரம்பித்து விட்டன. அதனால், 8-ம் வகுப்பு அல்லது 9-ம் வகுப்பிலேயே பிள்ளைகளுக்கு 'ஸ்மார்ட்போன்' வாங்கித் தருவது தவிர்க்க முடியாததாகி விட்டது. அப்படிக் கொடுத்து விட்டு, 'எப்போதும் போனையே பார்த்துட்டிருக்கிறாயே' என பெற்றோர் திட்டுவதில் நியாயம் இல்லை.

ஏனென்றால், முதல்முறையாக தனக்கென ஒரு ஸ்மாட்போன் கிடைத்ததும் பிள்ளைகள் அதன் மீது பெரும் ஈடுபாட்டுடனேயே இருப்பார்கள். அதற்காக, எப்போதும் மொபைலுடன் இருப்பதை வேடிக்கையும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பிள்ளைகள் ஸமாட்போனில் என்ன செய்கிறார்கள் என்று கண்காணிக்க வேண்டும்; சமூக வலைத்தளங்கள் வழியாக என்னென்ன பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை அவர்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களை நெறிப்படுத்த வேண்டும்.

ஒருவேளை, எதிர்பாராத பிரச்சினை ஒன்றில் பிள்ளைகள் மாட்டிக் கொண்டால், அதிலிருந்து அவர்களை மீட்கவும் பெற்றோருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

உங்கள் பிள்ளைகள் வட்ஸ்அப்பில் இருக்கிறார்கள் என்றால் அவர்களுடைய தினசரி நடவடிக்கைகள், மன உணர்வுகள், நண்பர்கள், பப்பி லவ் என எல்லாவற்றையும் இதன் மூலம் அறியலாம். பிறகு, உங்கள் பிள்ளைகளின் இயல்பைப் பொறுத்து கண்டிப்பது, தண்டிப்பது, எடுத்துச் சொல்லித் திருத்துவது எனப் பொறுமையாக செயல்படுங்கள்.

அடுத்தது, முகநூல்.படிக்கும் காலத்தில் இது அவசியமில்லை என்பதை அழுத்தமாகச் சொல்லுங்கள். பிள்ளைகள் காது கொடுக்கவில்லை என்றால், அவர்களுடைய புகைப்படங்களை முகநூலில் பதிய வேண்டாம் என்று எடுத்துச் சொல்லுங்கள்.

கை தவறுதலாக ஏதோ ஒன்றை தொட்டு விட்டாலும், இணையதளத்திலிருந்து கடகடவென ஆபாச வீடியோக்கள் கொட்டிவிடுகின்றன. பிள்ளைகள் ஆர்வக்கோளாறில் அவற்றை பார்க்கலாம். அதனால், வாரம் ஒருமுறையாவது பிள்ளைகளுடைய போன் ஹிஸ்டரியை பரிசோதனை செய்வது நல்லது.

முகநூலில் பதிவேற்றப்பட்ட படங்களின் முகத்தை மட்டும் எடுத்து, அதை எப்படி ஆபாசப் படமாக மாற்றி மிரட்டுகிறார்கள் என்பதை இதுபோன்ற செய்திகளை இணையத்தில் தேடியெடுத்து அவர்களுக்குக் காட்டுங்கள். இதுபோன்ற குற்றங்களால் உயிரைவிட்ட இளம் பெண்களைப் பற்றிய செய்திகளையும் பிள்ளைகள் பார்வைக்குக் கொண்டு செல்லுங்கள்.

முகநூலில் இருக்கிறது போது, அறிமுகம் இல்லாதவர்கள் இன்​ெபாக்ஸில் வந்து ஹாய் சொன்னால், அதற்குப் பதில் அளிக்காமல் இருப்பதுதான் நாகரிகம், மரியாதை எனப் பிள்ளைகளுக்குப் புரிய வையுங்கள்.

'உனக்குச் சமூக வலைத்தளங்களின் வழியாக ஏதாவது பிரச்சினை வந்தால், அதை உடனே அம்மாவிடம் சொல். நான் உன்னைக் காப்பாற்றுவேன்' எனச் சொல்லி பிள்ளைகளின் மனதில் நம்பிக்கையை தாய்மார் பதிய வைக்க வேண்டும்.

ஸ்மார்ட்போன் வழியாக உலகத்தில் இருக்கும் அத்தனை நல்ல விஷயங்களையும், பிள்ளைகளுக்கு நீங்களே அறிமுகப்படுத்தி விடுங்கள். நல்லவற்றைப் பார்க்க ஆரம்பித்துவிட்ட பிள்ளைகள், அதன்பின் தீயவற்றை அவர்களாகவே இனம்கண்டு புறம் தள்ளிவிடுவார்கள்.

No comments

Powered by Blogger.