Header Ads



கோத்தபாயவுக்கு எதிர்ப்பு வலுக்கிறதா..?

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைத்துக்கொண்டாலும் அவரை எந்த வகையிலும் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தக் கூடாது என கூட்டு எதிர்க்கட்சிக்குள் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாசுதேவ நாணயக்கார போன்ற பழைய இடதுசாரிகள் மாத்திரமல்லாது, குமார வெல்கம, டளஸ் அழகப்பெரும உள்ளிட்டோர் இது குறித்து கலந்துரையாடி வருவதாகவும், பசில் ராஜபக்சவின் ஆலோசகர்களாக இருக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இருவர், இந்த அணியுடன் இணைந்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோத்தபாய ராஜபக்ச சூழ்ந்துள்ள வியத் மக அமைப்பில் அங்கம் வகிக்கும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், அரசியல் எதிரிகளை தூக்கிலிட்டு கொலை செய்ய வேண்டும் என பகிரங்கமாக கூறியுள்ள கருத்து மற்றும் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக எதிர்காலத்தில் சுமத்தப்பட உள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

அத்துடன் வியத் மக, எளிய ஆகிய கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவான அமைப்புகள் நடத்தும் கூட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்து அதற்கு பதிலாக புதிய அமைப்பு ஒன்றை உருவாக்குவது பற்றியும் பேசப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் நாட்டில் தலைவராக தெரிவு செய்யப்பட வேண்டியவர் குறைந்தது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டவராக இருக்க வேண்டும் எனவும் இந்த விடயத்தில் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்ள வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கூறியிருந்தார்.

மேற்படி கலந்துரையாடிலின் பிரதிபலனாகவே குமார வெல்கம இவ்வாறான கருத்தை வெளியிட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.