Header Ads



’நாட்டின் மொத்தக் கடனில் 77% மஹிந்த ஆட்சியில் பெறப்பட்டது’

2017ஆம் ஆண்டுக்காக திறைசேரி பகிரங்கப்படுத்திய மொத்த உற்பத்தியில் அரசாங்க கடன் மற்றும் மொத்த உற்பத்தியை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடுகையில், இதன் வேறுபாடுகளைக் காண முடியும் என்று முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்திருந்த விடயத்தை நிராகரிப்பதாக திறைசேரி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் இந்த விடயங்களை திரிவுபடுத்தியுள்ளார். அடிப்படையில் உண்மையான விடயங்களை மறைக்க முயற்சித்துள்ளார் என நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"2017ம் ஆண்டுக்குரியது எனக்கூறி, கடன் மற்றும் மொத்த உற்பத்திக்கு இடையில் 3 சதவீத வித்தியாசம் இருப்பதாகக் கப்ரால் குறிப்பிட்டார். எனினும் 2010 தொடக்கம் 2013ற்கு இடையில் அக்காலப்பகுதியில் நிதியமைச்சரின் முன்மொழிவுகள் மற்றும் அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானங்களுக்கு அமைவாக, முக்கிய அரச தொழில்துறைகள் பல பெற்றுக் கொண்ட கடன்கள், அப்போதைய அரச நிதி அறிவிப்பில் உள்ளடக்கப்படவில்லை.

இதற்கமைவாக, முன்னைய அரசாங்கக் காலப்பகுதியில், புத்தளம் அனல்மின் நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், மத்தள விமான நிலையம் போன்ற திட்டங்களுக்காக பெற்ற கடன் தொகை செலுத்த வேண்டியுள்ளன.

இந்தக் கடன்கள் மத்திய அரசாங்கத்தின் நிதி அறிவிப்பில் நீக்கப்பட்டு இலங்கை மின்சார சபைக்கும், இலங்கை துறைமுக அதிகார சபைக்கும், விமான நிலையத்திற்கும், விமான சேவைகள் அதிகார சபைக்குமாக உட்படுத்தப்பட்டிருந்தது.

அவ்வாறு செய்யப்பட்ட இந்தக் கடன்கள், சம்பந்தப்பட்ட அரச தொழில்துறை ஊடாக மீண்டும் செலுத்த முடியும் என்ற தவறான நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்து. அரசாங்கம் பெற்றுக் கொண்ட இந்தத் தீர்மானத்தின் முன்னிலையில், அன்று மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் பணியாற்றிய கப்ரால், இன்று அரச தொழில்துறையில் நிலவும் கடன் அரசாங்கத்தின் நிதி அறிவிப்பிற்குள் உள்வாங்கப்படாமை குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கொள்கை ரீதியான தீர்மானத்தை மேற்கொள்ளாது கடன் மற்றும் மொத்த உற்பத்திக்கு இடையிலான வித்தியாசங்களை திரிவுபடுத்திக் காட்டுவதற்கு முயற்சித்துள்ளார்." என திறைசேரி தெரிவித்துள்ளது.

மேலும், "திறைசேரி கடன் மற்றும் தேசிய உற்பத்தி விகிதங்கள் தொடர்பிலோ, 2018ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் செலுத்த வேண்டி இருந்த பாரிய கடன் சுமையை மறைப்பதற்கு எதுவும் இல்லை. வரலாற்றிலேயே இதுவரையில் பதிவான ஆகக்கூடிய கடன் தொகை 2.4 ட்ரில்லியன் ரூபாயாகும். இதனை நல்லாட்சி அரசாங்கம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்தத் தொகையில் 77 சதவீதம் 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட காலங்கடந்த கடன் தொகைக்கு ஏற்ப செலுத்த வேண்டியதாகும். மொத்த உற்பத்தி மற்றும் அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களுடன் ஒப்பிட்டு விகிதங்களை கணிப்பீடு செய்வதில் திறைசேரி, தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது." எனவும் நிதியமைச்சின் அறிக்கையல் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.