-திருமதி. I.L.J பௌசியா (B.A.Dip Ed)
ஓய்வு பெற்ற ஆசிரியை-
இலங்கையின் இராஜதானிகளாக அநுராதபுரம், பொலன்னறுவை, தம்பதெனியா, யாப்பகூவ, குருணாகல், கம்பளை ஆகியன விளங்கின. இவ்வாறு தலைநகர் காலத்துக்குக் காலம் இடம் பெயரக் காரணமாக விளங்கியவை உள்நாட்டு, வெளிநாட்டுப் படை எடுப்புக்களே, சுமார் 2000 வருடங்கள் சுதந்திரமாக விளங்கிய சிங்கள இராஜதானி, இறுதியாக கோட்டைக்கு இடம் பெயர்ந்ததும் கோட்டை இராஜதானி மூன்றாகப் பிரிந்தது. இந்த அரசியல் பிளவானது 1505 இல் போர்த்துக்கேயர் இலங்கையின் கரையோரப் பிரதேசத்தில் கால் பதிக்க வாய்ப்பாக அமைந்தது. எனினும் கண்டி இராச்சியம் ஒரு சுதந்திர இராச்சியமாக எழுச்சி பெற்றது. போர்த்துக்கேயரை அடுத்து ஒல்லாந்தர் 1757 இல் கரையோரத்தில் ஆதிக்கம் பெற்றனர். பின் 1796 இல் பிரித்தானியர் ஆதிக்கம் பெற்று 1815 இல் கண்டி கைப்பற்றப்படும்வரை கண்டி இராச்சியம் சுமார் 300 வருடங்கள் சுதந்திர இராச்சியமாக விளங்கியது. கண்டி மன்னர்கள் ஐரோப்பியரின் ஆதிக்கத்தில் இருந்து இராச்சியத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பல போராட்டங்களை நடத்தினர், இராஜதந்திரங்களைக் கையாண்டனர். இதில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பை வரலாறு மறந்து விடாது.
போர்த்துக்கேயர் இலங்கை வரும்போது இலங்கையின் பொருளாதாரத்தில் முஸ்லிம்கள் தனிச் செல்வாக்குப் பெற்றிருந்தனர். உள்நாட்டு, வெளிநாட்டு வியாபாரம் அவர்களின் கையில் இருந்தன. ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் பெற்றிருந்த செல்வாக்குக் காரணமாக முஸ்லிம்கள் கரையோரப் பிரதேசங்களில் அதிகம் குடியேறி இருந்தனர். போர்த்துக்கேயர் முஸ்லிம்கள் வசமுள்ள பொருளாதாரத்தை தம் வசப்படுத்திக் கொள்வதற்காக கரையோரப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களை அடித்துத் துரத்தினர். அங்கிருந்து வெளியேறிய பெரும்பாலான முஸ்லிம்களைக் கண்டி மன்னன் மலைநாட்டுப் பிரதேசங்களில் குடியமர்த்தினான்.
இந்தக் குடியமர்வு முஸ்லிம்கள் நாட்டுக்காற்றிய பொருளாதார பங்களிப்பு, பெரும்பான்மை மக்களுடன் கொண்டிருந்த அந்நியோன்யத் தொடர்பை எடுத்துக் காட்டுகின்றது. இந்த உதவியை முஸ்லிம்கள் மறக்கவில்லை. மன்னனுக்கு விசுவாசமாக நடந்து கொண்டனர்.
இந்த வகையில் மௌலா முகாந்திரத்தின் மகனான உதுமா லெவ்வை ஆற்றிய இராஜதந்திரப் பணி வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. கி.பி.1747 இல் அரசு கட்டிலேறிய கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் திருமலை நாயகர் வம்சத்தைச் சேர்ந்த அரசன். நாயகன் பரம்பரைக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது.
தமிழ் நாட்டிலே நவாப்களின் வருகைக்கு முன் தமிழ் நாட்டின் ஒரு பகுதி நாயகர் நிர்வாகத்திலும், ஒரு பகுதி தேவர்களின் நிர்வாகத்தின் கீழும் இருந்து வந்துள்ளது. அப்பிரதேசத்தில் வாழ்ந்த காரைக்கால் முஸ்லிம்கள் நாயகர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். திருகோணமலை நாயக வம்ச மன்னர்களுக்கும், தமிழ் நாட்டு நாயக வம்சத்தினருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துவந்துள்ளது.
கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னன் காலத்தில் நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இந்தியக் . கடற்கரைப் பிரதேசங்களில் இருந்து இலங்கைக்கு அனுப்ப காரைக்கால் முஸ்லிம்களே உதவி செய்தனர். கள்ளக் கடத்தல் மூலம் இலங்கைக்குக் கொண்டு வரப்படும் பொருட்களை டச்சுக்காரருக்கு பிடிபடாமல் மலைநாட்டுக்கு அனுப்பி வைக்க சிலாபப் பிரதேச முஸ்லிம்களே உதவி செய்தனர். சாலியர் எனும் கணக்குக் குடும்பம் இத்துறையில் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. இதனை முஸ்லிம்கள் சுய இலாபத்திற்காக செய்யவில்லை. டச்சுக்காரருக்கு எதிராகவும் கண்டி மன்னருக்கு உதவியாகவும் செய்தனர்.
உதுமாலெவ்வை பல்மொழி தேர்ச்சி பெற்றவர். ஆங்கிலம், பிரஞ்மொழியை சரளமாகப் பேசக்கூடியவர். அது மட்டுமன்றி அவரிடம் காணப்பட்ட விவேகம், கூர்மையான அறிவு, நிதானப் போக்கு, பிரச்சினைகளை இனங்கண்டு தீர்க்கும் வல்லமை, கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னனை வெகுவாக கவர்ந்தது.
கரையோரப் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த டச்சுக்காரர் கண்டியைக் கைப்பற்ற கண்டி மன்னனுக்கு எதிராகப் பல வழிகளிலும் செயற்பட்டு வந்தனர். டச்சுக்காரரை இலங்கையிலிருந்து துரத்த ஐரோப்பியரின் உதவி அவசியம் என்பதை உணர்ந்தார். இச்சந்தர்ப்பத்தில் 1762 இல் கண்டி மன்னனைச் சந்திக்க திருகோணமலையில் இருந்து ஆங்கிலத் தூதுவரான ஜோன் பைபஸ் கன்னொருவைக்கு வருகை தந்தார். அவரை உபசரித்து அவர் மூலம் உதவியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் கண்டி மன்னன் தனது சார்பாக உதுமாலெவ்வையை அனுப்பி வைத்தார். இப்பணியை அவர் சிறப்பாக முடித்து வைத்தமைக்காக மன்னன் பெறுமதி மிக்க பரிசில்களை வழங்கி கௌரவித்தான். உதுமா லெவ்வையின் இராஜதந்திரப் பணி மன்னனை வெகுவாகக் கவர்ந்தது.
இதேகாலத்தில் கண்டி மன்னன் கர்நாடக நவாப் முகம்மது அலியிடம் பல்வேறு உதவி, ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள உதுமா லெவ்வையைத் தூதுவராக அனுப்பினான். தமது பணியை சிறப்பாகச் செய்து பல்வேறு உதவிகளைப் பெற்றுக் கொடுத்தமைக்காக அவரை கௌரவித்ததோடு தமக்கு விசுவாசமான ஆலோசகராகவும் அமர்த்திக் கொண்டான்.
இந்தியாவின் வங்காள விரிகுடாக் கடல் பிரதேசத்தில் பிரான்சியருக்கும், பிரித்தானியருக்கும் இடையில் அடிக்கடி போர் மூண்டன. பிரான்சியரிடமிருந்து தமது பிரதேசங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு பாதுகாப்பான இடத்தை பிரித்தானியர் தேடினர். இலங்கையின் திருகோணமலைத்துறைமுகம் மிகப் பொருத்தமான பாதுகாப்புத் தளமாகக் காணப்பட்டது. இதனால் 1796 இல் பிரித்தானிய கடற்படை இலங்கையின் கரையோரப் பிரதேசத்தைக் குறிப்பாக திருகோணமலையைக் கைப்பற்றிக் கொண்டது. இதனைத்தடுத்து நிறுத்த பிரான்சிய அதிகாரிகளின் உதவியைப் பெற முடியாத ஒரு சூழ்நிலையில் டச்சுக்காரர் தவித்தனர்.
கண்டி அரசன் பிரான்சின் உதவியைப் பெற்று டச்சுக்காரரைத் துரத்தும் நோக்கில் உதுமாலெவ்வையை 12 முறை பிரான்ஸிய அதிகாரிகளிடம் அனுப்பி வைத்ததன் மூலம் பிரஞ்சு மொழியை பேசச்கூடிய உதுமாலெவ்வை கண்டி மன்னனுக்குச் சார்பாக உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் உடன்படிக்கை மூலம் பெற்று வந்து கண்டி அரசனிடம் கையளித்ததன் மூலம் கண்டி மன்னனின் பெரும் பாராட்டுக்கும், கௌரவத்துக்கும் உரியவரானார்.
இதன் மூலம் டச்சுக்காரர் பிரித்தானியருக்கு எதிராக பிரான்ஸிடம் உதவிபெற முடியாது போனதால் டச்சுக்காரர் கரையோரப் பிரதேசங்களை பிரித்தானியரிடம் இழந்தது. உதுமா லெவ்வையின் இராஜதந்திரப் பணி கண்டி மன்னனுக்கு பெரும் உதவியாக அமைந்தது.
இவ்வாறு ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த உதுமா லெவ்வையின் மூலம் முஸ்லிம்களுக்கும், நாட்டுக்கும் பெரும் புகழ் கிடைத்தது. முஸ்லிம்கள், எப்போதும் நாட்டுக்கு விசுவாசமாக நடந்து கொண்டமைக்கு இது ஓர் உதாரணம். முஸ்லிம்கள் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய்தது போல நாட்டை அந்நியரிடம் இருந்து பாதுகாக்கப் போராடியவர்கள் என்பது வரலாற்று உண்மை.
-Vidivelli
3 கருத்துரைகள்:
இது இப்படியான கதைகளை சிங்களவர்கள் நம்ப மாட்டார்களே!
Ajan antony தமிழ் பயங்கரவாதத்தை விட சிங்களவர்கள் சற்று உண்மையை புரிந்துகொள்ள கூடியவர்கள். உங்களுடைய உண்மையான வரலாறு என்ன என்பதை மகா வம்சம் தெளிவாக சொல்லிவிட்டது
ஆனாலும், இந்த கதை சுப்பராக தான் இருக்கு.
இவ்வாறான கதைகளோடு, சினிமா நியூஸ், IPL கிரிக்கட் நியூஸ் போன்றவைகளையும் பிரசுரித்தால் நன்று.
Post a Comment