Header Ads



16 பேருக்குள் பலாய் - திரிசங்கு நிலையில், மகிந்த அணியும் விரட்டுகிறது

கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அணியில் உள்ள 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் எதிர்வரும் ஜூலை 3ஆம் நாள் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில், கூட்டு எதிரணியுடன் இணைந்து கொள்ளவுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்கள் அடுத்த வாரம் நடக்கும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் பங்கேற்பர் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏனைய ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கூட்டு எதிரணிக்கு அழைத்து வரும் முயற்சிகளிலும், இந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் பதவிகளைக் கொண்டுள்ளவர்களை தம்முடன் இணைத்துக் கொள்ள முடியாது என்று கூட்டு எதிரணி நிபந்தனை விதித்திருந்தது.

அத்துடன், குழுவாக வருபவர்களை ஏற்க முடியாது என்றும் தனித்தனியாக வந்து தம்முடன் இணைந்து கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது.

எனினும், தாம் சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொள்ளப் போவதில்லை என்று 16 பேர் அணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம ஜெயந்த நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, 16 பேர் அணியில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்சவை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

2

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணியை தம்முடன் சேர்த்துக் கொள்ள முடியாது என்று, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெரும, சிசிர ஜெயக்கொடி, பந்துல குணவர்த்தன ஆகியோர், இதனைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

”16 பேர் அணி, கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி விட்டது. ஆனால், அவர்கள் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்னமும் கூட்டு அரசாங்கத்தில் தான் அங்கம் வகிக்கிறது.

16 பேர் அணியில் உள்ள பலர் அண்மையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உயர் பதவிகளையும் பெற்றுள்ளனர்.

ஐதேகவுடன் இணைந்து அரசாங்கத்தில் பணியாற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் பதவிகளை வைத்துக் கொண்டு,அவர்கள் எம்முடன் இணைய முடியாது.

அவர்கள் வேண்டுமானால் நாடாளுமன்றத்துக்குள்ளே அல்லது வெளியே எம்முடன் இணைந்து செயற்படலாம்.

ஆனால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு, கூட்டு எதிரணியின் பதவிகளைப் பெற முடியாது.” என்று  தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, 16 பேர் அணியில் உள்ள பலரும், கூட்டு எதிரணியில் இணைந்து கொள்ள விருப்பம் கொண்டிருந்தாலும், அதற்கு கூட்டு எதிரணிக்குள் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இதனால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனும் ஒட்டிக் கொள்ள முடியாமல், கூட்டு எதிரணியுடனும் சேர முடியாமல், திரிசங்கு நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

No comments

Powered by Blogger.