Header Ads



ரமலான் நோன்பு, உடலில் ஏற்படுத்தும் அற்புத மாற்றங்கள் - BBC News

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் நோன்பு இருக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக, வட துருவத்தில் கோடைகாலத்தில்தான் ரமலான் நோன்பு வருகிறது. அதாவது, இந்த காலக்கட்டத்தில் வெம்மையான வானிலையும், பகல் பொழுது நீளமானதாகவும் இருக்கும்.

அப்படியானால், நார்வே போன்ற சில நாடுகளில், ஒரு நாளுக்கு 20 மணி நேரத்திற்கு மேல் நோன்பு இருத்தல் வேண்டி இருக்கும்.

இவ்வாறு இருப்பது உடல்நலத்திற்கு நல்லதா? சரி நோன்பு இருக்கும் போது நம் உடலுக்கு என்னவெல்லாம் நிகழ்கின்றன.

நோன்பின் முதல் ஓரிரு நாட்கள்
எடுத்தவுடனே நம் உடலானது நோன்பு நிலைக்கு சென்றுவிடாது. கடைசியாக நாம் உண்ட உணவின் சத்துகளானது நம் உடலில் தங்கி இருக்கும். இது முதலில் உடல் இயக்கத்திற்கு உதவி புரியும்.

முதலில் நம் கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்ட குளுக்கோஸில் நம் உடல் இயங்கும். இந்த குளுக்கோஸ் தீர்ந்த பின், கொழுப்பானது நம் உடல் செயல் இயக்கத்திற்கு பயன்படும்.

கொழுப்பில் உடல் இயங்கும் போது, உடல் எடை குறைய தொடங்கும், கொலஸ்ட்ரால் அளவு குறையும். நீரழிவு நோய் அபாயமும் குறையும்.

ஆனால், அதே நேரம் ரத்தத்தில் சக்கரை அளவு குறைவது உடலை பலவீனப்படுத்தும்.

இந்த காலக்கட்டத்தில் நீங்கள் தலைவலி, தலைசுற்று மற்றும் குமட்டல் ஆகியவற்றை உணரலாம். பசி அளவு மிக அதிகமாக இருக்கும் போது நிச்சயம் இவற்றை உணரலாம்.

உடல்வறட்சி குறித்து கவனம்
நோன்பின் மூன்றாவது நாளிலிருந்து உடல் வறட்சி குறித்து கவனம் கொள்ளல் வேண்டும்.
தொடர்ந்து நாம் நோன்பு இருக்கும் போது, கொழுப்பு உடைந்து, கரைந்து, ரத்தம் சக்கரையாக மாற்றம் அடையும்.

இரண்டு நோன்புகளுக்கிடையே ஆகாரம் உண்ணும் காலக்கட்டத்தில், நீராகாரம் நிறைய எடுத்துக் கொள்ளல் வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து வியர்ப்பது உடல்வறட்சிக்கு வழிவகுக்கும்.

நோன்பு காலக்கட்டம் இடையே நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில், சரியான அளவில் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு இருத்தல் வேண்டும்.
அதேநேரம், புரதங்கள், உப்பு மற்றும் நீர்சத்தும் சரி வீதத்தில் இருத்தல் மிக அவசியம்.

உங்கள் உடல் தயாராகிவிட்டது
நோன்பு தொடங்கு எட்டாம் நாளிலிருந்து உங்கள் உடல் நோன்பிற்கு ஏற்றார்போல உடல் முழுமையாக தகவமைத்துக் கொள்ளும்.

நோன்பினால் இன்னப்பிற நன்மைகளும் இருக்கின்றன என்கிறார் கேம்பிரிட்ஜில் உள்ள அடேன்ப்ரூக் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர் ரஷீன் மஹ்ரூஃப்.

அவர், "நாம் சாதாரண நாட்களில் அதிகளவிலான கலோரிகள் எடுத்துக் கொள்வோம். இது நமது உடலானது பிற பணிகள் செய்வதிலிருந்து தடுக்கும். குறிப்பாக உடல் தம்மை தாமே சரி செய்துக் கொள்வது இதனால் தடைப்படும்." என்கிறார்.

"ஆனால், நோன்பு காலக்கட்டத்தில் குறைவாக கலோரிகள் எடுத்துக் கொள்வதால் இந்த குறையானது சரியாகும்." என்கிறார் மருத்துவர் ரஷீன்.

நோன்பானது நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், நோய் தொற்றுகளுக்கு எதிராக போராடவும் பேருதவிபுரிகிறது.
நச்சுத்தன்மையை நீக்க
நோன்பின் இறுதி 15 நாட்கள், நோன்பு செயல்முறைக்கு உங்கள் உடல் முற்றும் முழுவதுமாக தகவமைத்துக் கொள்ளும்.

உங்கள் பெருங்குடல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் தோல் ஆகியவை இந்த காலக்கட்டத்தில் உடல் நச்சுகளை அகற்ற தொடங்கும்.

இந்த தருணத்தில், உங்களுடைய உடல் உறுப்புகள் உச்சபட்சமாக செயல்படும் அதன் பழைய நிலைக்கு திரும்பும். உங்களது நினைவாற்றல், கவனிக்கும் திறன் மேம்படும் என்கிறார் மருத்துவர் ரஷீன்.

"நமது உடலானது புரதத்தை ஆற்றலாக மாற்ற கூடாது. முற்றும் முழுவதுமாக பட்டினி கிடக்கும் போதுதான் இது நிகழும். அதாவது பல வாரங்கள் சாப்பிடாமல் பசியுடன் இருக்கும் போது இது நிகழலாம். ஆற்றலுக்காக தசைகளை பயன்படுத்திக் கொள்ள நேரலாம். ஆனால் ரமலான் மாதத்தில் சூரியன் உதிக்கும் மற்றும் அஸ்தமிக்கும் காலக்கட்டத்திற்கு இடையேதான் நாம் நோன்பு இருக்கிறோம். பின் அரோக்கியமான உணவு மற்றும் நீர் ஆகாரங்களை உண்கிறோம். இது நம் தசைகளை காக்கும்." என்கிறார் மருத்துவர்.

அப்படியானால் நோன்பு இருத்தல் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதா?
ஆம். ஆரோக்கியமானதுதான். ஆனால், அதற்கொரு நிபந்தனை இருக்கிறது என்கிறார் மருத்துவர் ரஷீன் மஹ்ரூஃப்.

நோன்பு இருத்தல் உடல்நலத்திற்கு நல்லதுதான். நாம் என்ன சாப்பிடுகிறோம், எப்போது சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க நோன்பு உதவி செய்கிறது. ஒரு மாதகாலம் என்பது நோன்பிற்கு சிறந்ததுதான் என்றாலும், தொடர்ந்து நோன்பு இருத்தல் அறிவுறுத்தத்தக்கது இல்லை என்கிறார்.

தொடர்ந்து நோன்பு இருக்கும் போது, கொழுப்பு ஆற்றலாக மாறுவது நின்று, நம் உடலானது தசைகளை ஆற்றலாக மாற்றும் நிலைக்கு செல்லும். இது பசி பட்டினி நிலை. இது உடல்நலத்திற்கு நல்லது அல்ல என்கிறார் மருத்துவர்.

No comments

Powered by Blogger.