Header Ads



பிள்ளை பெற்றால், 84 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை - இலங்கையில் சட்டம் வருகிறது

பெண் பணியாளர்களுக்கான பிரசவ விடுமுறையை 84 நாட்களுக்கு நீடிப்பதற்கான இரண்டு சட்டத் திருத்த பிரேரணைகளை சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

தற்போதுள்ள சட்டங்களின் படி, பெண்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, 42 நாட்கள் விடுமுறையை மாத்திரம் பெற்றுக் கொள்ள முடியும்.

முதல் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மாத்திரம், 84 நாட்கள் பிரசவ விடுமுறையைப் பெற்றுக் கொள்ளலாம்.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, இரண்டு திருத்தச் சட்ட பிரேரணைகளின் படி, உயிருடன் உள்ள ஒவ்வொரு குழந்தைக்குமாக, 84 நாட்களை பிரசவ விடுமுறையாக, எடுத்துக் கொள்ளலாம்.

இந்த 12 வார விடுமுறையில், இரண்டு வாரங்கள் பிரசவத்துக்கு முன்னரே எடுத்துக் கொள்ளலாம். பிரவசத்துக்கு முந்திய இரண்டு வாரங்களும் அவர் பணியாற்றியிருந்தால், பிரசவத்துக்குப் பிந்திய 10 வாரங்களுக்கு பின்னர் அந்த விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம்.

பிரசவத்தின் பின்னர் குழந்தை உயிருடன் இல்லாத சந்தர்ப்பத்தில், 42 நாட்கள் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பிரசவ விடுமுறை ஊதியத்துடன் வழங்கப்படும். விடுமுறை நாட்கள் மற்றும் ஏனைய  ஆண்டு விடுமுறைகளுக்கு மேலதிகமாக இது வழங்கப்படும்.

No comments

Powered by Blogger.