இஸ்ரேலியர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்பதை உறுதிசெய்து கொண்டேன் - கிறிஸ்தவ மதகுரு சரத்
இஸ்ரேலிய பொலிஸார் என்னை அதட்டி சப்தமிட்டு பேசினார்கள். எனது பலஸ்தீனுக்கான விசா ரத்துச் செய்யப்பட்டுவிட்டதாகவும், இஸ்லாமிய மாநாடு நடக்காதெனவும் ஜோர்தானுக்கு திரும்பிச் செல்லுமாறும் உத்தரவிட்டார்கள். பலஸ்தீனுக்கு செல்வதை அனுமதிக்க முடியாதென்றார்கள். இதிலிருந்து இஸ்ரேலியர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்பதை உறுதிசெய்து கொண்டேன் என கிறிஸ்தவ மதகுரு சரத் இத்தமல் கொட தெரிவித்தார்.
பலஸ்தீனில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பங்கேற்க இலங்கையிலிருந்து சென்ற தூதுக்குழுவினர் ஜெரூசலேமிலுள்ள அலன் பீ எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பியனுப்பப்பட்டமை தொடர்பில் கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
"பலஸ்தீன நாட்டில் இஸ்லாமிய சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ் பலஸ்தீனத்திலிருந்து எனக்கு அனுப்பப்பட்டது. பலஸ்தீன தூதரகம் எனது விமான டிக்கெட்டும் தயார் என தெரிவித்திருந்தது. ஜோர்தானிலிருந்து என்னை பலஸ்தீனுக்கு அதிகாரிகள் அழைத்துச் செல்வார்கள் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நான் ஜோர்தான் சென்றதும் ஒரு பலஸ்தீன அதிகாரி என்னை விமான நிலையத்தில் வரவேற்று ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். அடுத்த நாள் பொஸ்னியாவிலிருந்து வருகைதந்திருந்த பேராசிரியர்கள் இருவரும் இருந்தார்கள். காலையில் அவர்களைச் சந்தித்தேன்.
அங்கிருந்த மாநாட்டு ஏற்பாட்டாளர்களான பலஸ்தீன சார்பில் அதிகாரிகள் எம்மை காரில் ஜோர்தான் பலஸ்தீன எல்லைவரை அழைத்துச்சென்றார்கள். அவ் எல்லையிலிருந்து இஸ்ரேலுக்கு செல்வதற்கு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பலஸ்தீனுக்கு செல்வதற்கு விசா காரியாலயத்துக்கே நான் அனுப்பப்பட்டேன். எனதும், பொஸ்னியர்கள் இருவரதும் பாஸ்போர்ட்களைப் பெற்றுக்கொண்டார்கள். எம்மை வரிசையில் நிற்குமாறு கூறினார்கள். பாஸ்போர்ட்டை பரிசோதனை செய்வதற்காகவே எடுத்துச் சென்றார்கள். நான் வரிசையில் நின்று கொண்டிருந்தேன்.
அப்போது பொலிஸ் உத்தியோகத்தர் எனது பெயரை சப்தமிட்டு அழைத்தார். மாநாடு ரத்துச் செய்யப்பட்டு விட்டது. ஜோர்தானுக்கு திரும்பிச் செல்லுங்கள் என்றார்.
அத்தோடு எனது பாஸ்போர்ட்டை இன்னோர் பெண் பொலிஸாரிடம் கொடுத்து ஜோர்தானுக்கு திரும்பிச் செல்வதற்காக என்னை பஸ் வண்டிக்கு அழைத்துச் செல்லுமாறு உத்தரவிட்டார். நான் மேலும் இருவருடன் வந்திருக்கிறேன். அவர்களுடனே நான் செல்ல வேண்டும் என்று பொலிஸாரிடம் கூறினேன்.
பின்பு என்னை வெளியில் அழைத்துச்சென்று அமருமாறு கூறினார். 45 நிமிடங்கள் அவ்வாறு அமர்ந்திருந்தோம். சிறிது நேரத்தில் பொஸ்னியாவைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரை அழைத்து வந்தார்கள். இஸ்ரேல் பொலிஸ் அதிகாரிகள் எம்மை அச்சுறுத்தி கடுமையான வார்த்தைப் பிரயோகத்தின்பின் எம்மை ஜோர்தான் எல்லைக்கு அழைத்துச் செல்லுமாறு பஸ் டிரைவரிடம் கூறினார்கள்.
மீண்டும் நாங்கள் ஜோர்தானில் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம்.
ஏன் என்னை இப்படி இஸ்ரேல் பொலிஸார் நடத்தினார்கள் என்று புரியவில்லை. எனது விசா ரத்து செய்யப்பட்டுள்ளது என்றால் அவர்கள் அந்த விபரத்தை என்னிடம் அமைதியான முறையில் தெரிவித்திருக்கலாம். ஆனால், அவர்கள் என்னை அச்சுறுத்தும் விதத்திலே விசாவை மறுத்தார்கள். இதிலிருந்து இஸ்ரவேலர்களின் ஆணவம், பலாத்காரம் எனக்குப் புரிந்தது.
இலங்கையர் என்ற வகையில் என்னை நிந்திக்கும் வகையிலே அவர்கள் செயற்பட்டார்கள். ஒரு நாட்டுக்கு இன்னோர் நாட்டின் சர்வதேச மாநாட்டினை தடை செய்யமுடியுமா? முடியாதல்லவா? பொலிஸார் சப்தமிட்டு கூறினார்கள். மாநாடு தடை செய்யப்பட்டு விட்டது என்றார்கள்.
ஒரு நாட்டின் மாநாடு நடத்தும் உரிமையை இன்னோர் நாட்டினால் தடை செய்வது என்பது மனித உரிமை மீறல் அல்லவா? பலஸ்தீனர்களுக்கு மாநாடு நடத்துவதற்கு உரிமை உள்ளதல்லவா?
ஒரு நாட்டுக்கு கௌரவம் கிடைப்பது துப்பாக்கிகளினாலோ, அல்லது இராணுவத்தினரின், பொலிஸாரின் எண்ணிக்கையினாலோ அல்ல. அடுத்த நாடுகளை நேசிக்கும், கௌரவிக்கும் அளவிலேயே அவர்களும் கௌரவப்படுத்தப்படுகிறார்கள். இஸ்ரேல் பலஸ்தீனத்தை ஆக்கிரமித்து மேற்கொள்ளும் அடாவடித்தனங்களுக்கு மனிதாபிமானமுள்ள எவரும் அனுமதியளிக்க முடியாது" என்றார்.
-Vidivelli
Post a Comment