"ஹபாயாவை விரும்பினால், மாற்று மத சகோதரிகளும் அணியலாம்"
இலங்கை முஸ்லிம் பெண்களின், கடந்தகால தற்கால ஆடைகள்
-எம்.ஐ.எம்.அப்துல் லத்தீப்-
முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் தனியான கலாசாரப்பண்பாட்டு ஒழுக்க விதிகளைப் பேணுபவர்கள். ‘ஷரீஆ’ சட்டத்தை அனுஷ்டிப்பவர்கள். இது அவர்களின் வாழ்க்கையின் சகல விடயங்களிலும் பிரதிபலிக்கும்,முஸ்லிம் பெண்கள் உலகில் எப்பகுதியில் வாழ்ந்தாலும், அவர்கள் விதவிதமான ஆடைகளை அணியத் தேர்ந்தெடுத்தாலும் அவ்வ மைப்புகளில் இஸ்லாமிய கலாசாரம் பிரதிபலிக்கும். அவர்கள் மார்க்க விதிமுறைகளின் படி உடலின் மறைக்க வேண்டிய பகுதிகளை மறைத்தே அவ்வாடைகளை அணிவர். அதுவே முஸ்லிம் பெண்களின் தனித்துவம். நாட்டுக்கு நாடு உடை அமைப்புக்கள், வடி வங்கள் மாறினாலும் மார்க்க கலாசாரம் பேணப்படும். அண்டையப் பெருநாடான இந்தியாவின் சகல பகுதிகளிலும் முஸ்லிம்கள் வாழுகின்றனர் எனினும் முஸ்லிம் பெண்களின் உடைத்தோற்றங்கள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டாலும் மார்க்க சட்ட விதிகளைப் பேணியே ஆடைகளை அணிவர். இதன்படி இலங்கை யின் சில பகுதிகளும் அமைகின்றன. புத்தளம், கல்பிட்டி, மன்னார், யாழ்ப்பாணம், சிலாபம்,பேருவளை, கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தென்னிந்தியாவின் காயல்பட்டணம், அதிராம்பட்டணம், கீழக்கரை, முதலான பிரதேசங்களிலிருந்து குடி பெயர்ந்தவர்கள். எனவே, இவர்களின் ஊண், உடை, மொழி நடை, கலாசாரம், பண்பாடுகள் யாவும் அவர்களின் நடை முறையாகவே ஆரம்ப காலத்தில் இருந்திருக்கும், காலப்போக்கில் சில, பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.
ஆரம்பகாலப்பகுதி முஸ்லிம் பெண்கள் ‘கம்பாயம்’ என அழைக்கப்பட்ட தடித்த ஒரு வித புடைவையை அணிந்தனர். அவை தமிழ் நாட்டின் கம்பாயம் என்ற பகுதியிலிருந்து தருவிக்கப்பட்டவையாக இருக்கலாம். இப்புடைவைகள் பல வித சதுரக் கோடுகளால் பல வித கடும் நிறங்களால் ஆனவை. மருந்துக்கும் மலர் வடிவங்களோ வேறு ‘டிசைன்’ அமைப்புக்களோ கம்பாயப் புடைவைகளில் இடம் பெற்றிருக்காது. இப்புடைவையாலேயே தலையை மறைத்து முக்காடும் இட்டுக் கொள்வர். வெள்ளை அல்லது வேறு கடும் நிறங்களில் மேல் சட்டை அணிவர். கைச் சட்டையில் ஒருவித கொசுவம் வடிவமைத்திருப்பர். ‘றால் மண்டைக்கை’, ‘விசிரிக்கை’ ‘காப்புக்கை’, ‘பிளேன்கை’ என்பனவும் வேறு. கம்பாயப் புடைவையை விரும்பாத இளம் வயதுப் பெண்கள் ‘சீத்தை’ புடைவைகளை அணிந்தனர். இவை கம்பாயப் புடைவையிலும் சற்று மெல்லியவை. கடும் நிறப் பின்னணியில் மலர்கள், மலர் கொத்துகள் நிறைந்த அமைப்பாக இருக்கும். சிலர் சிறிய மலர் டிசைன்களையும், சிலர் பெரிய பெரிய மலர் டிசைன்கள் கொண்ட சீத்தைகளையும் விரும்பி அணிந்தனர். மேல் சட்டைகளை தனித்தனி நிறங்களிலான‘ பொப்லின்’ துணிகளில் பெற்றுக் கொண்டனர். காலப்போக்கில் சீத்தைப் புடைவை அணிவதிலும் பெண்கள் மாற்றத்தைத் தேடினர். அவற்றை சிறுமிகளின் ‘கவுன்’ முதலான ஆடைகளுக்கு மாற்றிவிட்டு தாங்கள் சீத்தையிலும் மெல்லிதான ‘வொயில்’ சாரிகளை அணிவதில் நாட்டங் கொண்டனர். அவை மெல்லியதாகவும், ஊடறுத்துப் பார்க்கக் கூடியதாகவும், இதுவரையிலான கடும் நிறங்களை நாடு வதினின்றும் சற்று விலகி, ‘லைட்‘ இளம் டிசைன்களைத் தெரிவு செய்வதிலும் கவனஞ் செலுத்தினர். இதனை கம்பாயம் அணிவதைத் தொடர்ந்து கடைபிடித்த மூத்த பெண்கள் அதாவது பாட்டி தரத்திலானவர்கள் சற்று முறைத்தும் பார்த்தனர். இதற்கு இக்காலப்பகுதியில் அறிமுகமான சினிமாத்துறை நாகரிகம், கல்வித்துறை வளர்ச்சியுடன் வெப்பக்காலநிலையும் காரணங்களாயின. எனினும் கம்பாயம் அணிவோரது ஆடைத் தெரிவில் மாற்றம் இருக்கவில்லை.
வொயில் சாரிகளை விரும்பிய இளம் பெண்கள் அவற்றின் ஊடுருவும் தன்மையிலிருந்து தவிர்ந்து கொள்ள சாரி அணியு முன்னர் பொப்லின் துணியாலான ‘சாயா’ என்ற உள்ளாடையை அணிந்தே வொயில் சாரிகளையும், இதற்கும் பின்னர் அறிமுகமான பலவித சாரிகளையும் அணிந்தனர். இக்காலப்பகுதியில்கல்வித் துறையும் வளர்ச்சி கண்டு முஸ்லிம் பெண்களும் ஏனைய இனத்தவர்களைப் போல ஆசிரியைத் தொழில் மற்றும் தொழில்களுக்கும் செல்லத் தொடங்கியதால் இச்சாரித் தெரிவுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.அத்துடன் உள்ளாடை பெயரில் மார்புக்கச்சையும் இணைந்தது. பின்னர் சாரிகளில் மாற்றங்கள் வந்தன. புதுப்புதுப் பெயர்களில் பல சாரி டிசைன்கள் படிப் படியாகப் புழக்கத்தில் வந்தன.அவற்றைப் பெண்கள் ஆவலுடன் வாங்கி அணிந்து மகிழ்ந்தனர்.
அவையாவன ‘ஓகண்டி’, ‘டிஷு’, ‘நைலோன்’, ‘நைலக்ஸ்’ போன்றவை. இவை ஓரளவு பளபளப்பாகவும், வழுவழுத்த தன்மையுடனும், கவர்ச்சியான அலங்கார டிசைன்களுடனும் வந்தவண்ணமிருந்தன. புடைவை வியாபாரத்திலும், அவற்றை அணிந்து வலம் வருவதிலும் போட்டித் தன்மைகள் ஏற்பட்டன. விசேட தினங்களிலும், பண்டிகைத் தினங்களிலும் புடைவை வியாபாரங்கள் கரை புரண்டன. புடைவை வர்த்தக நிலையங்களின் விற்பனையைத் தவிர, புடைவைப்பொட்டணி வியாபாரிகளும் வீடுகளுக்கு வருகை தந்தனர். ஒரு வீட்டுக்கு ஒரு பொட்டணி வியாபாரி வந்து வீட்டு முன்தண்ணையில் பொட்டணியை இறக்கிவிட்டால் அக்கம்பக்கத்து வீட்டுப்பெண்களும் புடைவை பார்க்க, வாங்க வந்து குழுமிவிடுவர். பெண்கள் வர்த்தக நிலையங்களுக்கும், தெரு வழியே அமைக்கப்பட்டிருக்கும் பெருநாள் ‘சேல்’ களுக்கும் சென்று புடைவைகளை வாங்கும் நிலைமைகளும் ஏற்பட்டன. இதனால் கலாசாரப் பிரச்சினைகள் தோன்றின. மஸ்ஜித்களிலும், மார்க்க உபதேசக்கூட்டங் களிலும் சமயப் பெரியார்களால் கண்டனங்களும் அறிவுரைகளும் நிகழ்த்தப்பட்டன. அதுவரைகாலமும் கணவர்களே கடைகளில் பெண்களுக்கும் பிள்ளைகளுக்குமான ஆடைகளையும் விரும்பி வாங்கி வருவர்.வீட்டினரும் அவற்றை விரும்பி அணிவர். பெண்கள் ஆண்கள் முன் செல்வதில்லை.
இப்போது காலம் மாறி பெண்களே புடைவைக் கடைகளில் உடைகளைத் தெரிவு செய்கின்றனர், கொள்முதலும் செய்கின்றனர். அல்லது கணவர்களுடன் மனைவிய ரும் புடைவைக் கடைகளுக்குச் செல்கின்றனர். இது கலாசார பிறழ்ச்சியைக் காட்டுகின்றது என்பர். இந்நிலைமைகளால் கணவர்களும் பொருளாதாரசிக்கல்களுக்கு உள்ளாகின்றனர். அதிக பணம் தேடவேண்டிய நிலை அவர்களுக்கு இக்காலப் பகுதியில் வட இந்திய ஆடை நாகரிகமும் நம் இளம் வயதுப் பெண்களை ஈர்த்துக் கொண்டது.சாரிகளுக்குப் புறம்பாக வடஇந்தியப் பெண்களைப் போல இவர்களும் ‘சராரா’, ‘மெட்சி’, ‘சல்வார்’ அணியத்தொடங்கினர்.முஸ்லிம் பிள்ளைகள் ‘சோல்’ என்னும் துண்டினால் தங்கள் தலைகளை மறைத்துக் கொண்டனர்.இப்போது இளம் பெண்கள் சாரி களை ஒதுக்கிவிட்டு இவைகளையே அணிந்து வலம் வந்தனர்.கம்பாயம், சீத்தை, கலாசாரம் பாவினையிலிருந்து மறைய, பெரிய பெண்கள் சாரிகளை அணிய இளசுகள், வடஇந்திய மேற்படி ஆடைகளை மோகித்தனர். மனப்பெண்களுக்கென விசேட சாரிகள் அதிக விலைக ளுடன் கொள்முதல் பண்ணப்பட்டன.
எனினும் இவை அவ்வைபவத்திலும் அடுத்த இரண்டொரு வைபவங்களிலுமே அணியப்பட்டன. ஜரி அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடியதான ‘பெனாரஸ்’ ‘காஞ்சிபுரம்’ ‘காஷ்மீர்’முதலான சாரிகளும் மணப்பெண்களை அலங்கரித்தன. பொதுவாக பாரம்பரிய இப்பெயர்கள் இவை விசேடமாகத் தயாரிக்கப்படும் நகரங்களின் பெயர்களைத் தாங்கியே வந்தன, வருகின்றன. இவ்வாறு காலம், நாகரிகம் என்பன மாறமாற உடைகள் மாத்திரமன்றி யாவுமே மாற்றம் கண்டன. எனினும் புதிய விதவித ஆடைகளையணிந்தாலும் முஸ்லிம் பெண்கள் தமது மார்க்கக் கலாசாரம் பேணியே ஆடையணிந்தனர். முற்காலப் பெண்கள் கம்பாயம் அணிந்த போது தலையில் முட்டாக்கு (முக்காடு) இட்டனர். தெருக்களில் செல்லும்போது வீதி ஓரமாக செல்வதுடன் தலையை மறைத்த முக்காட்டின் முகத்துக்கு இருபக்க சீலை கரை யை ஒரு கையால் ஒன்றிணைத்து முகவாய்க் கட்டையுடன் பிடித்து முகம் மூடிச்சென்றனர். மோட்டார் வண்டிகள், மாட்டு வண்டிகளில் பயணிக்கும் முஸ்லிம் பெண்கள் மோட்டார் வண்டியின் இரு பக்கங்களிலும், மாட்டு வண்டியின் முன் பின் பக்கங்களிலும் துணிகளை தொங்கவிட்டு தங்களை மறைத்துப் பயணித்தனர்.
பாடசாலைச் சீருடை
பொதுவாக பெண் பிள்ளைகளின் பாடசாலைச் சீருடையாக சிங்கள தமிழ் மாணவிகள் முழங்கால் வரையான வெள்ளை நிற கவுன் அணிந்து கழுத்துப் பட்டியும் அணிந்து செல்வர். இது முஸ்லிம் பெண் பிள்ளைகளுக்குப் பொருந்தாது. எனவே முஸ்லிம் கல்வியாளர்களும், பெற்றார்களும் பரிசீலித்து வட இந்தியாவின் சகல பெண்களும் இன, மத பேதம் பாராது அணியும் ‘பஞ்சாப்பி’ ஆடை எனப்படும் நாம் அழைக்கும் ‘பாய் கல்சான் என்னும் ஆடையைத் தெரிவு செய்தனர். பஞ்சாப்பியரை நாம் பொதுவாக 'Baai’ பாய் என்றே அழைப்போம். இவ்வாடை இஸ்லாமிய ஒழுக்க நெறிக்கும் உட்பட்டதாக அமைந்ததால் நாமும் இவ்வாடையைத் தெரிவுசெய்தோம்.ஆனால் நமது நாட்டுப் பிற மதப் பாடசாலை நிர்வாகத்தினர் சிலர் இந்த பஞ்சாப்பி சீருடையை முஸ்லிம் சீருடை எனக் கருதி தடை செய்வது பெரும் தவறும் கவலை தருவதுமாகும். எம்மில் இத்தகையதான இனவாதப் பார்வை இல்லை.
இறைவனும் தன் திருமறை அல் - குர்ஆனில்,
‘நபியே! விசுவாசியான ஆண்களுக்கு நீர் கூறும்! அவர்கள் தங்கள் பார்வையை கீழ் நோக்கி வைக்கவும். தங்கள் கற்பையும்; இரட்சித்துக் கொள்ளவும். இது அவர்களை பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்து கொள்கிறான்’ அத்.24: 30. ‘நபியே! விசுவாசமுள்ள பெண்களுக்கு நீர் கூறும்! தங்கள் பார்வையை கீழ் நோக்கியே வைத்துத் தங்கள் கற்பையும் இரட்சித்துக் கொள்ளவும்.(அன்றி, தங்கள் தேகத்தில் பெரும்பாலும்) வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர தங்கள் அழகையும், (ஆடை, ஆபரணம் போன்ற) அலங்காரத்தையும் வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும்…’ அத்.24: 31
எனவே, எமது முஸ்லிம் பெண்களுக்கு மாத்திரமன்றி ஆண்களுக்கும் தங்கள் பார்வையைத் தாழ்த்தும்படி கூறுவதுடன் தங்கள் கற்பையும் பாதுகாக்கும் படி புனித குர்ஆன் வலியுறுத்துகின்றது.
ஹபாயா
கடந்த இருபது வருடங்களுக்குள் இலங்கைப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்களாகச் சென்றது போல முஸ்லிம் பெண்களும் சென்றார்கள். குறிப் பாக சவுதி அரேபியாவுக்குச் சென்ற பெண்கள் அங்குள்ள சட்ட திட்டங்களுக்கு ஏற்ப அவர்கள் வெளியில் செல்லும் போது தலையை மறைத்து செல்ல நேரிட்டது.பொதுவாக பணிப்பெண்கள் வீட்டுப் பெண்களுடனேயே செல்வார்கள். அப்போது அவர்களும் அரபுப் பெண்களைப் போல ‘ஹபாயா’ அணிந்து செல்லப் பழகிக் கொண்டனர். இது நமது முஸ்லிம் பெண்களுக்குத் தமது கலாசாரத்துக்கு ஏற்ற உடையாகவும், சிக்கனமானதாகவும் அமைந்ததால் விடுமுறையில் வரும்போதெல்லாம் அதனை அணிந்து வந்ததுடன் தமது உறவுகளுக்கும் வாங்கி வந்தனர். இப்படித்தான் அரபு நாட்டு ஹபாயா இலங்கை முஸ்லிம் பெண்களிடமும் புழக்கத்தில் வந்தன. இக்காரணமன்றி சில இனவாதிகள் கூறுவது போல அரபு நாட்டவராலோ அல்லது பாக்கிஸ்தானியராலோ வலிந்து திணிக்கப் பட்டதல்ல.
இதுவரை இந்திய ஆடைகளை அணிந்த இலங்கை முஸ்லிம் பெண்கள் தற்போது ஒரே நிறத்திலான ஹபாயாக்களை அணிந்து வெளியில் செல்வதற்கு மார்க்க, பொருளாதார ரீதியான காரணங்கள் உள்ளன. மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள நியதிகளுக்கு ஏற்ப இந்த ஒரே ஹபாயாவில் அத்தனை விடயங்களும் அமைவதாலும் உடலின் இடை, மார்பகம், முகம் முதலானவை வெளிக்காட்டப்படாமலும் பாதுகாக்க முடிகின்றது. அத்துடன் அயலவர்களைப் பார்த்துப்பார்த்து விதவிதமான சாரிகளில் நாட்டங்கொள்ளாது,கணவர்களுக்கு பொருளாதார தாக்கம் ஏற்படாது பாதுகாக்கின்றது. அத்துடன் தமது தனித்துவமும் பேணப் படுகின்றது. இந்த வகையில் இதுவரை அணிந்து வந்த டசின் கணக்கான சாரிகளுக்கு பதிலாக இரண்டொரு சாரிகளை பாவனையில் வைத்துக் கொண்டு வெளியில் செல்லும் போது சாரியின் மேலால் ஹபாயா அங்கியை அணிந்து செல்கின்றனர். இளம் வயதுப் பெண்கள் சாரி அணியாது உள்ளே மெல்லிய கால்சட்டையணிந்து ஹபாயாவை அணிந்து செல்கின்றனர். இப்படி ஹபாயாவின் தெரிவானது செல்வந்தர், ஏழை என்ற தரம் நீக்கி சமத்துவம், சிக்கனம், கவர்ச்சி நீக்கிய ஒழுக்கம் பேணலை வலியுறுத்துகின்றது. எனினும் இது முஸ்லிம்களின் ஆடை என்ற மாயையை நீக்கி யாவரும் அணியலாம் என்பதுவே உண்மை.
32 வயதான சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான மொஹமட் பின் சல்மான் அண்மையில் அமெரிக்காவின் CBSN தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த நேர்காணலில் ‘கறுப்பு அபாயாதான் அணிய வேண்டுமென இஸ்லாம் கூறவில்லை ஷரீஆ சட்டங்களில் மிகத் தெளிவாகக் குறித்துரைக்கப்பட்டுள்ளன. பெண்கள் ஒழுக்கமான, மரியாதையான ஆடைகளை அணியவேண்டும், எனினும் இது கறுப்பு நிற அபாயா அல்லது கறுப்பு நிற தலை மூடும் ஆடையினை அணிய வேண்டும் என குறிப் பிடவில்லை. ஒரு பெண் எவ்வாறு ஒழுக்கமான மரியாதையான ஆடைகளை அணியவேண்டும் என நினைக்கின்றாரோ அவ்வாறு அவர் அணிந்து கொள்ள முடியும், அதனைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெண்களிடமே விடப்பட்டுள்ளது…..’ (30.03.2018 விடிவெள்ளி) இது கவனிக்கப்பட வேண்டிய விடயம்.
இங்கே சவூதி அரேபிய பெண்கள் ஹபாயாவை அணிவதால் நமது முஸ்லிம் பெண்களும் அதனை அணிகின்றனர் என்ற கருத்தை விடுத்து மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது போல அது ஒழுக்கத்துக்கும், சிக்கன வாழ்வுக்கும் உதவுகிறது என்பதாலேயே அணிகின்றனர் என்பதே பொருத்தமான கருத்தாகும். விரும்பினால் மாற்று மத சகோதரிகளும் இதனை அணியலாம்.
Writer article very long no body will read this. Pls rewrite with short news. Thanks
ReplyDeleteComprehensive article from holistic perspe tive. Well n Good.
ReplyDelete