பேய்கள் விலகிவிட்டன, மகாராஜா மீண்டும் மன்னராக மாறியுள்ளார் - மரிக்கார்
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆரம்பத்தில் இருந்த பிசாசுகள், எச்சில் பேய்கள் என அனைத்து கெட்ட சக்திகளும் விலகிச் சென்று விட்டதால், தமது கட்சி ஜனாதிபதியுடன் இணைந்து ஜனவரி 8 ஆம் திகதி பெற்றுக்கொண்ட மக்கள் ஆணைக்கான உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொலன்னாவையில் ஐக்கிய தேசியக்கட்சியின் அலுவலகத்தில் நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்துகொண்டு காலை பிடித்து இழுத்து பணிகளை செய்வதை சிலர் தடுத்தன் காரணமாகவே மக்களுக்கு அரசாங்கத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டது.
எனினும் தற்போது மீதமுள்ள ஒன்றரை வருடங்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தாமரை மொட்டு வெற்றி பெற்ற என்று, ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொண்டது போல கொண்டாட முயற்சித்து வருகின்றனர்.
39 சத வீத வாக்குகளையே தாமரை மொட்டு கட்சி பெற்றது. இதன் காரணமாகவே கூட்டு எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்து தோல்வியடைந்தனர்.
நாடாளுமன்றத்தின் பதவி காலம் இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கும் நிலையில் அதனை கலைக்குமாறு தற்போது புதிய கதையை பேசுகின்றனர். எதிர்வரும் 2020 ஆகஸ்ட் 17 ஆம் திகதியே நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிகிறது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் மகாராஜா மீண்டும் மன்னராக மாறியுள்ளதுடன் புத்தாண்டில், மகிந்தவையும் ஷிராந்தியும் அவர்களை விட வயதானவர்கள் சென்று வணங்குகின்றனர்.
என்ன சமூகம் இது. மூத்தவர்கள், விகாரைகளில் இருக்கும் பிக்குமாரை மாத்திரமே வணங்குவார்கள் எனவும் எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment