Header Ads



கொழும்பில் இப்படியும், ஒரு ஏமாற்றம்

கொழும்பில் பல கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல் சூட்சுமமான முறையில் திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விற்பனை செய்யப்படவிருந்த இரத்தினக் கல்லை பெற்றுக் கொண்ட நபர் பணத்திற்கு பதிலாக கருங்கல்லை கொடுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

கல்கிஸை பிரதேசத்தில் தரகர் போன்று செயற்பட்ட நபரினால் சூட்சுமமான முறையில் இரத்தினக் கல்லின் உரிமையாளரான வர்த்தகர் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக இரத்தினக் கல்லின் உரிமையாளர் இரண்டரை வருடங்களாக அதனை விற்பனை செய்யாமல் பாதுகாத்து வந்துள்ளார்.

4 கோடி ரூபாய் பெறுமதியான அந்த கல்லை ஒன்றரை கோடி ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கு வெளிநாட்டவர் தயாராக இருப்பதாக மோசடியாளர் தெரிவித்துள்ளார்.

இரத்தினக் கல்லை கல்கிச்சைக்கு கொண்டுவருமாறு கோரியதுடன் அதற்கு முற்பணமாக ஒருவர் லட்சம் ரூபாய் பணத்தை உரிமையாளருக்கு வழங்கியுள்ளார்.

கல்கிஸ்சையில் உரிமையாளரை சந்தித்த தரகர் இதனை இப்படியே வெளிநாட்டவருக்கு வழங்க கூடாது என கூறி பெட்டிக்குள் வைத்து அடைத்துள்ளார்.

சற்று நேரத்தில் பெட்டியை மீண்டும் உரிமையாளரிடம் வழங்கிய தரகர் வெளிநாட்டவரை அழைத்து வருகின்றேன் என கூறி சென்றுள்ளார்.

சென்றவர் மீண்டும் வராத நிலையில் பெட்டியை திறந்து பார்த்த உரிமையாளர் அதில் கருங்கல் ஒன்று இருந்ததனையே அவதானித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உரிமையாளர் கல்கிஸ்சை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். சந்தேக நபரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.