மஹிந்தவை காப்பாற்றும் ஐ.தே.க - ஜனாதிபதி கூறுகிறார்
முன்னைய ஆட்சியின் ஊழல் குற்றவாளிகள் குறித்து நடவடிக்கை எடுக்ககூறி நான் தெரிவித்துள்ள போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியினரே குற்றவாளிகளை காப்பாற்றி வருகின்றனர். மஹிந்த ராஜபக் ஷவுடன் தொடர்புபட்ட ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்கும் அமைச்சுக்கள் ஐக்கிய தேசியக் கட்சியிடமே உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். ராஜபக் ஷக்களை ஐக்கிய தேசியக் கட்சினர் காப்பாற்றுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த போது மத்திய வங்கி விவகாரத்தில் அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்படும் நகர்வுகள் குறித்து கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்.
மத்திய வங்கி பிணைமுறி ஊழல் நடவடிக்கைளில் எனது சார்பில் என்னால் எடுக்க முடிந்த சகல நகர்வுகளையும் முன்னெடுத்து வருகிறேன். சட்ட ஆலோசனைகளுக்கு அமைய நான் செயற்பட்டு வருகின்றேன். ஆணைக்குழு அறிக்கைக்கு அமைய அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து இப்போது வரையில் மூன்று சந்திப்புகளை உரிய நபர்களுடன் நடத்தியுள்ளேன். அது தொடர்பில் ஆராய்ந்து செயற்பட்டு வருகின்றேன். இலஞ்ச, ஊழல் தடுப்பு சட்டமூலத்தை திருத்த வேண்டிய தேவை உள்ளது. அதேபோன்று ஆணைக்குழு அறிக்கை வெளிவர முன்னரே எனது செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிலைமைகள் குறித்து நான் நன்றாக அறிந்துகொண்டேன். ஆகவே சட்டங்களில் திருத்தங்களை முன்னெடுக்கும் சட்ட ஆலோசனைகளை நான் ஆரம்பத்தில் இருந்தே பெற்று வந்துள்ளேன். கடந்த அமைச்சரவை கூட்டத்தில் நீதி சார் நகர்வுகள் குறித்து தீர்மானம் எடுத்துள்ளேன். இரண்டு கிழமைக்கு ஒருதரம் நான் சட்ட வல்லுனர்களை சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றேன்.
கேள்வி:- முன்னைய ஆட்சியில் ராஜபக் ஷக்களின் ஊழல்கள் குறித்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன, ஆயினும் ஏன் பொதுப்படையாக அவர்களுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க தாமதம் ?
பதில்:- இதில் முழுமையான பொறுப்பையும் இந்த ஊழல்கள் குறித்து தொடர்புடைய அமைச்சர்கள் பொறுப்பேற்க வேண்டும். சட்டம், நீதி, பொலிஸ் ஆகியவற்றிற்கு பொறுப்பான அமைச்சர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஜனாதிபதி ஆணைக்குழு கீழுள்ள பொறுப்புகள் என்னுடையவையாகும், ஆனால் அதற்கு முன்னரான செயற்பாடுகள் அனைத்தையும் உரிய அமைச்சர்கள் கையாளவேண்டும். இவற்றிற்கு பொறுப்பான அமைச்சுக்கள் அனைத்துமே ஐக்கிய தேசிய கட்சியிடமே உள்ளன. நல்லாட்சியில் இரண்டு கட்சிகளும் அமைச்சுக்களை பகிர்ந்துள்ளன. இதில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சுக்களில் நாம் தலையிடவோ எமது அமைசுக்களில் ஐக்கிய தேசியக் கட்சி தலையிடவோ கூடாது என்ற புரிந்துணர்வு அடிப்படையில் நாம் செயற்பட்டு வருகின்றாம். ஆகவே உரிய அமைச்சர்கள் கையாளவேண்டும்.
கேள்வி:- ஐக்கிய தேசியக் கட்சியினரா குற்றவாளிகளை தண்டிப்பதில் பின்னின்று வருகின்றனர்?
பதில் :- ஆம், ஐக்கிய தேசியக் கட்சியே இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். குற்றவாளிகளை தண்டிப்பதில் அவர்களே பின்வாங்கி வருகின்றனர். மஹிந்த அணியினரை அவர்கள் தான் காப்பாற்றிவருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
Ivaru nallavarnuuuuu.....Pacha paal kudi babyyyynu solraaru...!!!
ReplyDelete