Header Ads



ரிஷாத்தின் செயற்பாடுகளைத் துரிதப்படுத்த, நாங்கள் அத்தனை உதவிகளையும் செய்வோம் - பிரதமர் ரணில்

-சுஐப் எம்.காசிம்- 

புதிய அரசாங்கத்தை உருவாக்குவதில் அமைச்சர் ரிஷட் பதியுதீன் பாரிய பொறுப்புக்களை சுமந்தவர் என்றும், முசலிப் பிரதேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர் அயராது உழைத்து வருகின்றார் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

முசலிப் பிரதேச சபையில், மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சிலாவத்துறையில் இன்று (05) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  பிரதமர் மேலும் கூறியதாவது,

விடுதலைப் புலிகளினால் இந்தப் பிரதேசத்திலிருந்து நீங்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், காடாகிக் கிடந்த முசலி மற்றும் சிலாவத்துறை பிரதேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தீவிர செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதற்கு, நாங்கள் அத்தனை உதவிகளையும் செய்வோம். இந்தப் பிரதேசம் காடுகளாகிக் கிடந்தன. உங்களின் விவசாய நிலங்களும் காடுகளாகிப் போயின. கிராமங்களில் உள்ள காணிகள் வனபரிபாலானத் திணைக்களத்துக்குச் சொந்தமாகிவிட்டன. 

அந்தவகையில், இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்குச் சொந்தமான காணிகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். அதேவேளை, வரலாற்றுச் சிறப்புமிக்க வில்பத்து காடு தொடர்பான பிரச்சினையை இந்த மக்களுடன் சம்பந்தப்படுத்தியுள்ளார்கள். எனவே, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண, நீதிமன்றத்திலே வழக்கு தாக்கல் செய்ய முயற்சித்துள்ளார். நீதிமன்றம் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வைத் தரும். அதன்பின்னர், உங்களுக்குரித்தான விவசாய நிலங்களும், ஏனைய காணிகளும் உங்களுக்குக் கிடைக்கும். விவசாய நிலங்களுக்குச் சென்று நீங்கள் சுதந்திரமாக விவசாயம் செய்யலாம்.

சிலாவத்துறையிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்களை, மீண்டும் மீளக்குடியமர்த்த அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கும். சிலாவத்துறை நகரத்தை புதிதாக நிர்மாணிக்கவுள்ளோம். எனவே, அங்கிருக்கும் கடற்படையினருடனும் இது தொடர்பில் பேசவுள்ளோம். புதிய நகரத் திட்டத்துக்கு அதிகளவான இடம் தேவைப்படுகின்றது. அத்துடன், சிலாவத்துறை வைத்தியசாலையையும் தரமுயர்த்தி, அபிவிருத்தி செய்யும் முயற்சிகளில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஈடுபட்டுள்ளார். இந்த வைத்தியசாலை இந்தப் பிரதேசத்துக்கு மிக முக்கியமான ஒன்று. அத்துடன், கொண்டச்சியில் கைத்தொழில் பேட்டை ஒன்றை அமைப்பதற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நடவடிக்கை எடுத்து வருகிறார். மன்னார் மாவட்டத்தில் உல்லாசப்பயணத்துறையை மேம்படுத்தவும், மீன்பிடித்துறையின் தரத்தை உயர்த்தவும், தொழில்நுட்பப் பயிற்சிக் கல்லூரி ஒன்றை உருவாக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.  

இந்த வருடத்துக்கான தேசிய மீலாத் விழாவை முசலிப் பிரதேசத்தில் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. 

எனவே, இனிவரும் காலங்களில் இந்தப் பிரதேசத்தின் பக்கமே எமது பார்வை செலுத்தப்படவுள்ளது. யுத்தத்தின் பின்னர் மீள்குடியேற்றம் நடைபெற்று வருகின்றது. வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இன்னும் நிர்மாணிக்கப்படவுள்ளன. சுமார் ஐந்து அல்லது ஆறு வருடகாலத்துக்குள்ளேயே இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

எனவே, கிராம ஆட்சியை மத்திய அரசுடன் இணைந்து செயற்படுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும். ஆகையால், உங்களின் பிரச்சினைகளுக்கு விடிவு கிடைக்க உள்ளூராட்சி சபைகளை எமக்குக் கையளியுங்கள் என்று பிரதமர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோர் உரையாற்றினர்.

No comments

Powered by Blogger.