Header Ads



ஐ.தே.க. க்கு காவடி எடுக்கும் கட்சியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த முடியுமா? அதற்கான ஆதாரங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருக்கின்றதா என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு காவடி எடுக்கும் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் களம் மக்கள் விடுதலை முன்னணிக்கு விசேடமானது. பொருளாதார ரீதியாக மக்களை பாகுபாட்டிற்கும், வித்தியாசத்திற்கும் உள்ளாக்கியிருப்பது போன்றே இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் முறைமையும் பாகுபாடாக உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இருப்பவனுக்கும், இல்லாதவனையும் வித்தியாசப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் விருப்பு வாக்கு நாய்ச் சண்டை கிடையாது. இந்த தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி தமிழ் மக்களுக்கு ஏன் தேவை என்பதனை இங்கு தெளிவுபடுத்த வேண்டிய கட்டாய நிலமை காணப்படுகின்றது.

எமது நாட்டில் உள்ள முன்னைய அரசாங்கமும், இன்றுள்ள மைத்திரி மற்றும் மகிந்த அணிகளைத் தேடிப்பார்க்கின்ற போது, இரு கும்பல்களிலும் கள்ளர்களும் பொய்யர்களும் இருக்கின்றார்கள்.

இந்த விடயம் நாட்டில் உள்ள மக்கள் அனைவரிற்கும் தெரியும். ஆனால், வடக்கில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை எடுத்துக்கொண்டால், கடந்தகாலத்தில், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளைப் பயன்படுத்தி மக்களின் நலன்சார்ந்த விடயங்களை முன்னெடுக்கவில்லை.

இப்போது, தேர்தல் நெருங்கிய பின்னர் தான் வீதிகளைப் போடுகின்றார்கள். மக்களிற்கான அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் விடுதலை முன்னணியைப் பார்த்து சிங்களக்கட்சி என்று கூறுகின்றது. தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்று அங்கு, மக்களுக்கு விரோதமான அனைத்து உடன்படிக்கைகளுக்கும், அனைத்துச் சட்டங்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கு காவடி எடுக்கும் கட்சியாகவே காணப்படுகின்றது.

மக்களின் வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சிக்கு விற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று மக்கள் விடுதலை முன்னணியைப் பார்த்து இனவாதிகள் எனக் கூறுகின்றார்கள்.

அரசாங்கத்தின் பல்வேறு செயற்பாட்டிற்கு ஆதரவு அளிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த முடியுமா? அதற்குரிய ஆதாரங்கள் உள்ளனவா?

தெற்கில் மகிந்த ராஜபக்சவைப் போன்று வடக்கிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. மக்களுக்குரிய நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுக்க முடியாமல் தோல்வி கண்டுள்ள போதிலும், தேர்தலுக்குச் சம்மந்தமில்லாத அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

வடமாகாண மக்களுக்கு என்று ஒரு குரல் தேவைப்படுகின்றது. ஏனைய கட்சிகள் மக்களுக்கான குரல் கொடுக்க மறுத்திருக்கின்ற சந்தர்ப்பத்தில், மக்கள் விடுதலை முன்னணியாகிய நாங்கள் இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும், காணாமல் போனோர் பிரச்சினை, காணாமல் போனோர்களின் அலுவலகம் அமைப்பது தொடர்பாக சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்திருக்கின்றறோம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணி மக்களுக்கு குரலை மேலோங்கச் செய்வதற்கு, தமிழ் மக்களின் குரலாக மாறுவதற்கு தமிழ் மக்கள் விடுதலை முன்னணிக்கு உதவ முன்வர வேண்டும்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடமாகாணத்தில் ஒரு சபை தானும் கைப்பற்றினால், மக்களின் அபிவிருத்திக்கு நாம் பாதை அமைப்போம்.

திஸ்ஸராமையில் ஒரு சபை கிடைத்து அங்கு அந்த சபையை திறம்பட நடத்தியிருந்தோம். அது அந்த மக்களுக்கு நன்றாக தெரியும் எனவே, வடபகுதி மக்களின் குரலாக ஒலிப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணிக்கு ஒரு சந்தர்ப்பம் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.