தேர்தல் முடிந்தபின் "கிழக்கான் ஏமாந்த சோனகிரி, என்பது நிரூபிக்கப்படும்"
கிழக்கு மாகாண முஸ்லிம்களை ஆளப்படும் வர்க்கம் என்றும் தம் முன் மண்டியிட்டு நிற்கும் கூட்டம் என்றும் முக நூலில் கேவலமாக பேசிய மு. காவின் உயர்பீட உறுப்பினர் ஷபீக் ரஜப்தீனின் கூற்றை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் இவரது இத்தகைய கருத்துக்கு காரணம் இதே கருத்தில் கிழக்கு மக்களை கையாளும் ரவூப் ஹக்கீமின் நடவடிக்கையே என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
ஷபீக்கின் பிரதேசவாத உரை பற்றி ஆராயும் கட்சியின் உயர் மட்ட குழு கூட்டத்தின் போது அவர் கூறியதாவது.
முஸ்லிம் காங்கிரஸ் என்பது கிழக்கு மாகாணத்துக்கு மட்டுமல்ல, முழு இலங்கைக்குமாகும் என்ற சிந்தனையிலேயே கிழக்கு மாகாணத்தில் அஷ்ரப் தலைமையில் தோற்றுவிக்கப்பட்டது. அக்கட்சியின் ஆரம்பத்தில் கிழக்கு மக்கள் ஆதரவளிக்காத நிலையில் ஊவா மக்களின் செல்வாக்குடன் தலை நிமிர்ந்து பின்னர் கிழக்கிலும் வெற்றி பெற்று அமைச்சர் அஷ்ரப் மூலம் கிழக்கை விட கிழக்குக்கு வெளியே உள்ள மாகாணங்கள் நன்மை அடைந்தன. இதன் மூலம் கிழக்கை தலைமையாக கொண்ட கட்சியின் மூலம் மேற்கிலும் சாதிக்க முடியும் என்பதை அஷ்ரப் காட்டியிருந்தார்.
அதன் பின் ஹக்கீம் தலைமை பதவியை பெற்ற போது அவர் கண்டியான் என்றோ, கொழும்பில் வாழ்பவர் என்றோ கிழக்கு மக்கள் பிரதேச வாதம் பார்க்காமல் தம் தலைவராக ஏற்றுக்கொண்டனர். அது மட்டுமல்லாமல் 2004ம் ஆண்டு பொதுத்தேர்தேர்தலில் கல்முனை சார்பாக ஹக்கீம் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்ட போது சுமார் எண்பதினாயிரம் வாக்குக்களை அம்மக்கள் அவருக்கு வழங்கினர். கல்முனை முஸ்லிம்கள் தமதூர் பிரதிநிதியையும் தோற்கடித்து ஹக்கீமை வெல்ல வைத்தனர். அதேபோல் மாகாணசபைத்தேதலில் திருகோணமலையில் ஹக்கீம் போட்டியிட்ட போது நாற்பதினாயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை அம்மக்கள் அளித்தனர்.
ஆனாலும் கிழக்கு மக்கள் இந்த ஹக்கீமினால் ஏதேனும் உரிமைகளை பெற்றார்களா? இல்லவே இல்லை. மாறாக அவர்கள் மதுவுக்கும் மாதுவுக்கும் சூதுக்கும் பதவிக்கும் விற்கப்பட்டனர். மு. கா கட்சியின் உயர் பீடத்தில் இருந்த கிழக்கு மாகாணத்தவர்களின் செல்வாக்கு குறைக்கப்பட்டு ஷபீக் ரஜாப்தீன் போன்ற பிரதேசவாத, உயர்வர்க்க சிந்தனை கொண்ட தென்னிலங்கையினர் அதிகரிக்கப்பட்டனர்.
எமது நிதியினாலும் இரத்தங்களினாலும் கட்டப்பட்ட மு. காவின் தலைமையகமான தாருஸ்ஸலாம் போக்கிரிகளின் அமைவிடமாக மாறியதுடன் பல கோடி ஊழல்களுக்கும் ஆட்பட்டது.
அங்கு செல்லும் கிழக்கு மாகாண முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளன் வாசலில் நாக்கை தொங்கப்போட்டு கிடக்கும் நாய் போல் பார்க்கப்பட்டான். அமைச்சர் ஹக்கீமை சந்திக்க செல்லும் சாதாரண கிழக்கான் அங்கு அவமானப்படாமல் திரும்பியதில்லை. இது பற்றி என்னிடம் பலரும் முறையிட்டு இவற்றை கண்டிக்கும் படி சொல்லியுள்ளனர்.
இத்தகைய ஹக்கீமின் கிழக்கு மக்களை தம் அடிமையாக கருதும் போக்கினாலேயே ஷபீக்கும் இவ்வாறு பேசியுள்ளார். இத்தகைய பிரதேச வாத வெறிகொண்ட ஏமாற்றுக் கட்சி இன்னமும் தேவையா என்பதை வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும். ஷபீக்கின் இத்தகைய பேச்சுக்காக அவரது பதவியை ராஜினாமா செய்ய வைத்து அவரின் இடத்துக்கு இன்னுமொரு மேலாதிக்க சிந்தனை கொண்ட, கிழக்கு அல்லாத ஒருவரே ஹக்கீமால் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் கிழக்கான் இத்தகைய பதவிகளுக்கு தகுதியற்றவன் என்ற ஷபீக்கின் கருத்தை ஹக்கீம் ஆமோதித்துள்ளார்.
தேர்தல் முடிந்த பின் ஷபீக் வேறொரு பதவிக்கு நிச்சயம் நியமிக்கப்பட்டு கிழக்கான் ஏமாந்த சோனகிரி என்பதை நிரூபிப்பார்கள்.
ஆகவே கட்சிக்காக எந்த மாகாண மக்கள் அதிக வாக்களித்துள்ளனரோ அந்த மக்களுக்கே கட்சிக்கு கிடைத்த கனீமத்துகள் எனும் பதவிகள் அதிகமாய் பங்கு வைக்கப்பட வேண்டும். இதுதான் நபியவர்களின் வழி காட்டலுமாகும்.
இவ்வாறு செய்யாமல் கிழக்கு மக்களின் வாக்குகள் பெற்று ஆளாகிவிட்டு அம்மக்களை கேவலமாக நடத்தும் ஹக்கீமையும் முஸ்லிம் காங்கிரசையும் மக்கள் புறக்கணிப்பதன் மூலமே இவர்களுக்கான தண்டனையை வழங்க முடியும்.
Neenka ippave tholviya oththu kondeenkala?
ReplyDelete