Header Ads



காத்தான்குடி நகரசபை ஹிஸ்புல்லாவின், வழிகாட்டலில் இயங்குவதே சிறந்தது - ஜனாதிபதி இணைப்பாளர்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் பாரியளவில் அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கவுள்ளார். அந்த அபிவிருத்திப் பணிகளுக்குப் பொறுப்பான தலைமைத்துவத்தை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கே அவர் வழங்கவுள்ளார் என வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளருமான பேசல ஜயரத்ன தெரிவித்தார். 

காத்தான்குடியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  அவர் அங்கு மேலும் கூறியதாவது:- 

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தமையினாலேயே அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அதேபோன்று, முஸ்லிம் மக்களின் ஆதரவினாலேயே அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாத்திரமே சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்களிடையே  நல்லிணக்கம், ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். நாட்டில் பிரிவினைவாதம் தலைதூக்கி தெற்கில் சிங்கள அடிப்படை வாதமும், வடக்கில் தமிழ் அடிப்படை வாதமும் அதிகரித்துள்ள நிலையில், அதனை நிவர்த்தி செய்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடியவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்திரமே. 

உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடுகின்ற கட்சி பிரதிநிதி ஊடாகவே எமது அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும். அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் பாரியளவில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். அந்த திட்டங்களுக்கு பொறுப்பான தலைமைத்துவம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கே வழங்கப்படும். அவர் ஊடாகவே கிழக்கில் எமது பணிகள் முன்னெடுக்கப்படும். 

2020இன் பின்னரும் 2025 வரை மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவே தொடர்ந்தும் இருப்பார். அதுவரைக் காலம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இந்த பிரதேசத்தின் அபிவிருத்திகளுக்கு பொறுப்பானவராக இருப்பார். அதேபோன்று, ஹிஸ்புல்லாஹ் என்பர் இந்த மாகாணத்தில் உள்ள சிரேஷ்ட அரசியல்வாதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேரடி தொடர்;பில் உள்ள அவரது கட்சியைச் சேர்ந்தவர் எனவே அவரது தலைமையில் காத்தான்குடி நகர சபை இயங்கினால் மாத்திரமே அது சிறந்த முறையில் இயங்கும். – என்றார். 

No comments

Powered by Blogger.