Header Ads



அரசியலில் இருந்து விலக, சுமந்திரன் திட்டமிடுகிறாரா..?


அரசியலமைப்பு மாற்ற முயற்சிகள் தோல்வியடைந்தால், அதற்குப் பொறுப்பேற்று அரசியலில் இருந்து விலகும் எண்ணத்துடன் தாம் இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கனடிய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பு மாற்றம் ஒன்றின் ஊடான தீர்வு ஒன்று ஏற்பட வேண்டும், அதில் எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே, அரசியலில் எனது ஈடுபாடு ஏற்பட்டது.

இந்த இலக்கில் வெற்றியடைந்தால் எனது அரசியல் பயணத்தை நிறுத்திக் கொள்ளலாம் என்று பல தடவைகள் நான் நினைப்பதுண்டு.

அந்த இலட்சியத்துக்காகவே அரசியலுக்கு வந்தேன் என்பதால், அந்த இலக்கை அடைந்த பின்னர், அதற்கு மேல் அரசியலில், இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த அரசியலமைப்பு மாற்ற முயற்சிகள் தோல்வியடைந்தால், அதற்கான பொறுப்பையும் நான் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறெவரும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

இரா.சம்பந்தன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுவார். ஆனால் அவர் அரசியலில் இருந்து விலகுவதென்பதற்கு இடமில்லை.

நான் விலகலாம். விலக வேண்டும் என்ற சிந்தனையும் இருக்கிறது.

வெற்றியடைந்தாலும் அது எனது அரசியல் பயணத்தின் இறுதியாக இருக்கலாம்.  தோல்வியடைந்தாலும் எனது அரசியல் பயணத்தில் இறுதியாக இருக்கலாம் என்ற சிந்தனை என்னிடம் உள்ளது.

இதனை ஒரு முடிவாக நான் கூறவில்லை, அப்படியான சிந்தனையில் தான் இப்போது இருக்கிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.