Header Ads



நான் தோற்கவில்லை, அரசாங்கத்தை வீழ்த்தத் தயார் - மஹிந்த

ஜனாதிபதி தேர்தலில் நான் தோற்க வில்லை. சர்வதேச சக்திகளால் தோற்கடிக் கப்பட்டேன். இன்றும் எனக்கே மக்கள்  செல்வாக்கு உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். அரசியல் அமைப்பின் மூலம் நாட்டினை துண்டாடும் முயற்சிகள் முன்னெடுக்கப்ப டுகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும்.  
இந்த அரசாங்கத்தை வீழ்த்தும் போராட் டத்தில் தலைமை தாங்க  நாம்  தயார் எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மக்கள் சந்திப்பு நேற்று ஹோமாகமை பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், 

நாம் வென்று கொடுத்த சுதந்திரத்தை  இந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கம் நாசமாக்கியுள்ளது. நாம் முன்னெடுத்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அனைத்துமே இன்று கைவிடப்பட்டுள்ளன. சர்வதேச நாடுகளுக்கு நிலங்களை விற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு எமது வளங்களை வழங்கியும் அதில் வரும் பணத்திலேயே அரசாங்கம் தனது செலவுகளை பார்த்துக்கொள்கின்றது. நாம் மோசடிகளை செய்தோம், களவுகளை செய்தோம், மக்களின் சொத்துக்களை சூறையாடினோம் என கூறி ஆட்சிக்கு வந்த நபர்கள் எம்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு ஆதாரத்தையும் வெளிபடுத்த முடியாது தடுமாறி வருகின்றனர். மாறாக இவர்கள் பட்டப்பகலில் கொள்ளையடித்து வருகின்றனர்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தில் மத்திய வங்கியில் கொள்ளையடித்தனர். இன்றுவரையில் குற்றவாளிக்கு தண்டனை வழங்க முடியாது குற்றவாளிகளை காப்பாற்றி வருகின்றனர். ஜனாதிபதி குற்றவாளியை தண்டிக்க விசாரணை நடத்தினால் பிரதமர் அதனை தடுக்கின்றனர். உண்மையான குற்றவாளிகள் யார் என்பது இன்று மக்களுக்கு தெரிந்துள்ளது. எம்மை குற்றவாளிகள் என கூறி எம்மை பழிவாங்க நினைக்கும் நபர்களே உண்மையான குற்றவாளிகள். ஆகவே இவர்களை வீழ்த்தும் போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். 

எமது ஆட்சியில் இந்த நாடு தன்னிறைவு பொருளாதார வளர்ச்சி கண்ட நாடாக மாற்றம் பெற்றது. விஷம் இல்லாத உணவுகளை நாம் உற்பத்தி செய்தோம், விவசாயிகளுக்கு விஷம் இல்லாத உரங்களை வழங்கினோம். எனினும் இன்று அனைத்துமே மாற்றம் கண்டுள்ளது. அரிசி, பருப்பு என அனைத்துமே சர்வதேச நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது. அனைத்தையும் சர்வதேச நாடுகளில் பெற்றுக்கொண்டு எமது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் இந்த அரசாங்கம் செயற்படுவது கண்டிக்கத்தக்கது. 

மறுபுறம் புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கி இந்த நாட்டினை துண்டாடும் சதித்திட்டங்கள் முன்னெடுக்கபட்டு வருகின்றது. வடக்கு கிழக்கு இணைப்பு, அவர்களுக்கு அதுயுச்ச அதிகாரங்கள் என அனைத்தும் வழங்கி இந்த நாட்டினை பிளவுபடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆகவே இந்த நாடு பிளவுபட வேண்டுமா அல்லது இணைந்து செயற்பட வேண்டுமா என்பதை இந்த நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும். ஆகவே இந்த நாடு பிளவுபடுவதை விரும்பாத சகலரும் இம்முறை தேர்தலில் எம்முடன் கைகோருங்கள். 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மக்களின் ஆதரவை பெற்று வருகின்ற நிலையில் எமது மக்கள் எதனை விரும்புகின்றனரோ அதையே நாமும் செய்ய வேண்டும். மக்கள் விரும்பாத எதையும் நாம் முன்னெடுக்க தயாராக இல்லை. ஆகவே மக்களுக்காக தலைமை தாங்க நாம் தயாராகவே உள்ளோம். நான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோற்கவில்லை, சர்வதேச சக்திகளின் மூலமாக தோற்கடிக்கப்பட்டேன். ஆகவே இந்த நாட்டினை நேசிக்கும் மக்கள் தொடர்ந்தும் எம்முடன் உள்ளனர் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி வருகின்றது. எனவே இந்த அரசாங்கத்தை வீழ்த்தும் பயணத்தில் அனைவரும் ஒன்றினைவோம், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவை பெற்று எமது பலத்தினை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இருந்தே உறுதிப்படுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.