Header Ads



சமூக நலலுக்காக ACMC ஸுடன், இணைந்து பயணிக்க ரிஷாட் அழைப்பு


-ஊடகப்பிரிவு-

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம், கொழும்பு ஆகிய 07 மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானை சின்னத்திலும், அம்பாறை, குருநாகல், கம்பஹா,  களுத்துறை, திருகோணமலை, கண்டி ஆகிய 06 மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை அந்தந்த மாவட்ட செயலகங்களில் இன்று (21) தாக்கல் செய்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானை சின்னத்திலும், காத்தான்குடி நகரசபை மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையில் தனது மயில் சின்னத்தில், தனித்துப் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் நகரசபை, புத்தளம் பிரதேச சபை, கற்பிட்டி பிரதேச சபை ஆகியவற்றில், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரசபை, மன்னார் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகியவற்றிலும், வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை, வவுனியா தமிழ் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகியவற்றிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை (Maritime Pattu), மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஆகியவற்றிலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள கெக்கிராவ பிரதேச சபை, கல்னேவ பிரதேச சபை, கஹட்டகஸ்கிகிலிய பிரதேச சபை, இப்பலோகம பிரதேச சபை, கெப்பத்திகொல்லாவ பிரதேச சபை ஆகியவற்றிலும், கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு மாநகர சபையிலும் மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து, யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நகரசபை, மூதூர் பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை,  திருமலை நகரசபை, கந்தளாய் பிரதேச சபை, மொரவெவ பிரதேச சபை ஆகியவற்றில் மக்கள் காங்கிரஸ் தனித்து, தனது மயில் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி தலைமையிலான,ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் கீழ் பொத்துவில் பிரதேச சபை , நிந்தவூர் பிரதேச சபை, கல்முனை மாநகர சபை ஆகியவற்றில் மயில் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

குருநாகல் மாவட்டத்தின் குருநாகல் மாநகர சபை, குளியாப்பிட்டிய பிரதேச சபை, ரிதீகம பிரதேச சபை, நாரம்மல பிரதேச சபை, பொல்கஹவெல பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகளில் மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில், தனித்துப்  போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கண்டி மாவட்டத்தில் ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை, அக்குரணை பிரதேச சபை, பாத்ததும்பர பிரதேச சபை, உடபலாத்த பிரதேச சபை, உடுநுவர பிரதேச சபை, யட்டிநுவர பிரதேச சபை, பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை, கம்பளை நகரசபை ஆகியவற்றில் மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 
அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு மாநகர சபையிலும், களுத்துறை மாவட்டத்தின் பேருவளை பிரதேச சபை, களுத்துறை நகரசபை ஆகியவற்றிலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டன.

இதுதொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வெளியிட்டுள்ள செய்தியில், சமூகத்தின் உரிமைக்காகவும், நலனுக்காகவும் உருவாக்கப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது, நாட்டின் பல பாகங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. சமூகத்தின் எதிர்கால நலனையும், அபிவிருத்திகளையும் கருத்திற்கொண்டு, ஒற்றுமையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து பயணிக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார்.   

No comments

Powered by Blogger.