4 கோடி ரூபாவை புறக்கணித்து, புதையல் தோண்டியவர்களை கைதுசெய்த விசேட அதிரடிப்படை
தமக்கு வழங்கப்பட்ட நான்கு கோடி ரூபா இலஞ்சத்தைப் புறக்கணித்து, புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் மூவரை தம்புள்ளை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
தலதா மாளிகைக்கு உரித்தான கலேவெல, எதமல்பொத, வஹகோட்டே பிரதேசத்திலுள்ள காணி ஒன்றில் புதையல் தோண்டுவதற்காக சில மாதங்களாக, பாரிய கல் ஒன்றை உடைத்துக் கொண்டிருந்த மூன்று சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்புள்ளை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய அதிகாரிகளால் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்த நிலையில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. இதன் போதே இம் மூவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பொலிஸ் குழுவினர் அவ்விடத்தை சுற்றிவளைத்த போது, சந்தேக நபர்கள் இயந்திரம், உபகரணங்களை பயன்படுத்தி பாரிய கல் ஒன்றை உடைத்துக் கொண்டிருந்ததோடு, சுமார் 25 அடி ஆழமான குழி ஒன்றைத் தோண்டி அதனுள் சுரங்கம் ஒன்றை அமைத்து புதையல் தேடிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள், அப் பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரும், பெக்கோ இயந்திர உரிமையாளர் மற்றும் கண்டி பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரும் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தை மூடி மறைப்பதற்காக, சுற்றிவளைப்புக்காக சென்றிருந்த தம்புள்ளை பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு, அங்கிருந்த வர்த்தகர் 4 கோடி ரூபாவை இலஞ்சமாக வழங்க முயற்சித்த போதிலும், அப் பொலிஸ்குழுவினர் அதனைப் புறக்கணித்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து வெடிமருந்து, டெக்னேட்டர், எலுமிச்சைகள், மின்சாரத்தால் இயங்கக்கூடிய விசேடமான கல்லுடைக்கும் இயந்திரம், பெகோ இயந்திரம், பதிவு செய்யப்படாத இலக்கத்தகடுடன் கூடிய மோட்டார் சைக்கிள் மற்றும் மண் அகழ்வுக்காக பயன்படுத்தப்படும் மேலும் சில உபகரணங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பெகோ இயந்திர உரிமையாளர் கலேவெல பிரதேசத்தை சேர்ந்தவரெனவும், அவர் மணித்தியால கூலி அடிப்படையில் புதையல் தோண்ட வந்துள்ளதாகவும் தெரிவிக்க ப்பட்டுள்ளது. பொலிஸ் அதிரடிப் படையினர் அவ்விடத்தை சுற்றி வளைத்தபோது அங்கு புதையல் தோண்டிக் கொண்டிருந்த மேலும் சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபர்களைக் கைது செய்ததன் பின்னர் சம்பவ இடத்துக்கு கலேவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் வரவ ழைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் தம்புள்ளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், கலேவெல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Post a Comment