பாகிஸ்தானில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தம், பேஸ்புக், டுவிட்டர், யூட்யூப் முடக்கம்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபத்திற்கு செல்லும் பிரதான வழிகளில் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் போலீஸ் மற்றும் துணை ராணுவம் முயற்சி எடுத்தது. இந்த நடவடிக்கையின் போது, போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மோதல் வெடித்தது. போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி கல்வீசி தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் வெடி குண்டுகள் மற்றும் தடியடி நடத்தினர்.
இதனால், போராட்டம் நடைபெற்ற இடம் களேபரமானது. போராட்டக்காரர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பாகிஸ்தானில் உள்ள தொலைக்காட்சி ஒளிபரப்புகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. ஒளிபரப்புக்கூடாது என்ற உத்தரவை பாகிஸ்தானில் மின்னணு ஊடகங்கள் ஒழுங்கு முறை ஆணையமான (PEMRA)பெம்ரா பிறப்பித்துள்ளது. சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் போன்ற சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால், பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது போன்ற ஒரு சூழல் உருவாகியுள்ளதாக பரவலாக வெளிநாட்டு ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் கடந்த நவம்பர் 8 ஆம் தேதி முதல் பைசாபாத் பகுதியில் போராட்டம் நடைபெற்று வந்ததாகவும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல கொடுக்கப்பட்ட கெடு முடிந்தும் போராட்டம் நீடித்ததையடுத்து, போலீசார் அடக்குமுறையில் இறங்கி போராட்டக்காரர்களை கலைக்க முற்பட்டுள்ளனர். அப்போது இந்த போராட்டம் வன்முறையாக வெடித்ததாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், போராட்டக்காரர்களை கலைக்க 8,500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், கல்வீச்சில் ஒரு போலீஸ் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 150க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Jaffna muslim must tell us also why this demonstration.
ReplyDelete