Header Ads



மதுரங்குளியில் பஸ் விபத்து - 5 பேர் மரணம், 45 பேர் காயம்


கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்று, புத்தளம், மதுரங்குளிப் பகுதியில், இன்று காலை 8.15 மணியளவில் விபத்துக்குள்ளானதில், குறைந்தது 5 பேர் பலியானதோடு, 45 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 45 பயணிகளும் முந்தல் மாவட்ட வைத்தியசாலை மற்றும் புத்தளம் தள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த குறித்த தனியார் பஸ், 10ஆம் கட்டைக்கும் மதுரங்குளிக்கும் இடையில் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியமையினால், இந்த விபத்து  ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்து இடம்பெற்றதன் பின்னர், கொழும்பு புத்தளம் பிரதான வீதியின் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருந்ததுடன், புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன, முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் ஏக்கநாயக்க சம்பவம் இடம்பெற்ற ஸ்தலத்திற்கு வருகை தந்திருந்ததுடன், போக்குவரத்து பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

- ரஸீன் ரஸ்மின்

No comments

Powered by Blogger.